Published : 07 Sep 2019 08:53 AM
Last Updated : 07 Sep 2019 08:53 AM

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் அல்கா லம்பா

அல்கா லம்பா

புதுடெல்லி

ஆம் ஆத்மி மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அல்கா லம்பா அக்கட்சியை விட்டு நேற்று விலகி காங்கிரஸில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியில் நீண்டகால மாக பணிபுரிந்து வந்தவர் அல்கா லம்பா. பின்னர், அர்விந்த் கேஜ்ரிவால் கொள்கைகளின் மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக காங்கிரஸிலிருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் சந்தினி சவுக் தொகுதியில் அல்கா லம்பா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சியமைத்தது.

இந்நிலையில், ஆம் ஆத்மியில் தீவிரமாக பணிபுரிந்து வந்த அல்கா லம்பாவுக்கும், கட்சித் தலைமைக்கும் அண்மைக்கால மாக பல விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.

குறிப்பாக, மறைந்த பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதினை திரும்பப் பெறக் கோரி ஆம் ஆத்மி சார்பில் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அல்கா லம்பா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடந்தபோது அதை எதிர்த்து வாக்களித்தார். இதனால் கட்சி யின் மூத்த தலைவர்கள் அல்கா லம்பாவை கடுமையாக விமர்சித்தனர்.

இதையடுத்து, சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் அல்கா லம்பா பங் கேற்கவில்லை. மேலும் முதல்வர் கேஜ்ரிவால் நடத்திய பிரச்சார பேரணியிலும் பங்கேற்கவில்லை. அதன்பின் ஆம் ஆத்மி அடைந்த தோல்விக்கு அக்கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் பொறுப்பேற்க வேண்டும் என அவர் பகிரங்கமாக அறிவித்தார். இதனால், கட்சித் தலைமைக்கும், அல்கா லம்பாவுக்கும் மனக்கசப்பு அதிகமானது.

இந்த சூழலில், தன்னை ஆம் ஆத்மி தலைவர்கள் அவமானப் படுத்துவதாகவும் அதனால் கட்சியில் இருந்து வெளியேறப் போவதாக கடந்த மாதம் அறிவித்த அல்கா லம்பா, நேற்று அதிகாரப் பூர்வமாக அக்கட்சியை விட்டு விலகினார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விடைபெறு கிறேன். அக்கட்சியுடனான 6 ஆண்டுகால பயணம் பல்வேறு விஷயங்களை எனக்கு கற்றுத் தந்தது. அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தார்.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அல்கா லம்பா கடந்த வாரம் சந்தித்து பேசினார். இந்நிலையில் நேற்று அவர் மீண்டும் சோனியா காந்தியை சந்தித்தார். பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x