

புதுடெல்லி
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் (வரும் 19-ம் தேதிவரை) நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
ஆனால், சிறைக்குச் செல்வதைத் தவிர்க்கும் வகையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கப் பிரிவிடம் சரணம் அடைவதற்கான மனு சிதம்பரம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அமலாக்கப்பிரிவு பதில் அளிக்க நோட்டீஸ் அளித்த நீதிமன்றம், வரும் 12-ம் ேததிக்கு விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்தது.
இந்நிலையில் திஹாரி சிறையில் ப.சிதம்பரம் இன்று மாலை முதல் அடைக்கப்படும் பட்சத்தில் அங்கு பொருளாதார குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு ஆளானவர்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறை குறித்து சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திஹார் சிறையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "திஹார் சிறையில் உள்ள பொருளாதார குற்றங்கள் செய்தவர்களுக்கான வளாகத்தில் சிறை எண் 7-ல் அடைக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 7-ம் சிறை மிகவும் பாதுகாப்பானது.
இரு அடுக்கு பாதுகாப்பு கொண்டது. மிகவும் சிறிய அறைகளைக் கொண்டிருக்கும் இந்த சிறையில் பொருளாதார குற்றவாளிகள் தவிர்த்து மற்ற பல குற்றவாளிகள் ஆகியோரும் இந்த வளாகத்தில் அடைக்கப்படுவார்கள்.
வசதிகள்
சிறையின்விதிப்படி நீதிமன்றக் காவலில் வருவோர்கூட தரையில்தான் உறங்க வேண்டும். ஆனால், ப.சிதம்பரம் மூத்த குடிமகன், முன்னாள் நிதியமைச்சர், எம்.பி. என்பதால் மரக்கட்டில் மட்டும் மெத்தையின்றி வழங்கப்படும்.
சிறையில் தயார் செய்யப்பட்டஉணவுகளைத்தான் ப.சிதம்பரம் சாப்பிட வேண்டும். மதிய உணவு, இரவு உணவுடன் பருப்பு, ஒரு காய், 4 முதல் 5 சப்பாத்திகள் வழங்கப்படும்.
ஒருவேளை ப.சிதம்பரம் தென்னிந்திய உணவுகள் வழங்க வேண்டும், சிறை உணவு பிடிக்கவில்லை எனக் கேட்டால், அவருக்கு சிறை கேண்டீனில் இருந்து தயார் செய்யப்பட்ட நொறுக்கு தீனிகளை வரவழைத்து சாப்பிடலாம். நீதிமன்ற அனுமதிபெற்று வேறு உணவுகளையும் வரவழைத்து சாப்பிடவும் சிதம்பரத்துக்கு அனுமதி உண்டு.
நீதிமன்றக் காவலில் இருக்கும்போது ப.சிதம்பரத்துக்கு தேவையான உடைகளை அவர்களின் குடும்பத்தினர் அளிக்கலாம். அதை அணிந்து கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்படும்.
திஹார் சிறை -1
தேசத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மும்பை தீவிரவாத தாக்குதலின்போது பல்வேறு நடவடிக்கைகளை தீவிரவாதிகளுக்கு எதிராக எடுத்ததால் அவருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது.
சிறையிலும் அந்த அச்சுறுத்தல்கள் இருக்கும்பட்சத்தில் அவர் சிறை எண் ஒன்றுக்கு மாற்றப்படுவார். அங்கு கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தின் சிறப்பு போலீ்ஸ் பிரிவு பாதுகாப்பு அளித்து வருகிறது.
திஹார் சிறையின் ஒன்றாம் வளாகத்தில் உள்ள சிறையில்தான் 2ஜி அலைக்கற்றை ஊழல் குற்றவாளியான சஹாரா நிறுவனத்தின் சுபத்ரா ராய், காமென்வெல்த் அமைப்பின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாதி ஆகியோர் இந்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த சிறையில் சமையல் அறையும், மேற்கத்திய பானி கழிவறையும் இருக்கும். சிறையில் வழங்கப்படும் அதே உணவுகள்தான் இங்கும் வழங்கப்படும்’’ என திஹார் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐஏஎன்எஸ்