Published : 05 Sep 2019 05:30 PM
Last Updated : 05 Sep 2019 05:30 PM

புதிய மோட்டார் வாகனச் சட்டம்: 2 மாநிலங்களில் 5 நாட்களில் வாகன ஓட்டிகளிடம் ரூ.1.41 கோடி அபராதம் வசூல் 

புதுடெல்லி,

புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்த 5 நாட்களில் ஹரியாணா, ஒடிசா ஆகிய இரு மாநிலங்களில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் ரூ.1.41 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

சாலைப் பாதுகாப்பை அதிகரிப்பது, விபத்துக்களை குறைப்பது ஆகியவற்றுக்காக கடும் அபராதங்களுடன் கூடிய புதிய மோட்டார் வாகனச் சட்டதிருத்த மசோதா கடந்த ஜூலை 31-ம் தேதி நிறைவேற்றியது இந்த மசோதாவுக்கு கடந்த மாதம் 9-ம் தேதி குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார். கடந்த 1-ம்தேதி முதல் பெரும்பாலான மாநிலங்களில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்க வந்துள்ளது.

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதங்கள் கடந்த சில நாட்களாக விதிக்கப்பட்டு வருகின்றன. ஹரியானா மாநிலம் குருகிராமில் மொபட் ஓட்டிவந்து இளைஞர் போக்குவரத்து விதிகளை மீறியதால் அவருக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அவர் வைத்திருந்த வாகனத்தின் மதிப்பு ரூ.15 ஆயிரம்தான் என்று அந்த இளைஞர் வேதனை தெரிவித்தார்.

இதேபோல, ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.38 ஆயிரம், ஒடிசாவில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி, பல்வேறு விதிமுறை மீறல்கள் செய்ததால் அவருக்கு ரூ.47 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. ஹரியாணாவில் டிராக்டர் ஓட்டுர் ஒருவருக்கு ரூ. 59 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் சாலைப் பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஹரியாணா, ஒடிசா இரு மாநிலங்களில் மட்டும் போக்குவரத்து விதிமுறை மீறல் காரணமாக ரூ.1.40 கோடி அபராதமாக வசூலாகியுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

ஒடிசா மோட்டார் வாகனத்துறையின் சார்பில் இதுவரை 4,080 செலான்கள் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை ரூ.89.90 லட்சம் வசூலாகியுள்ளது. 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஹரியானாவில் இதுவரை 343 செலான்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியோருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.52.32 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலேயே 3,900 செலான்கள் வாகனஓட்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x