

புதுடெல்லி
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது, ஏர்செல் ‘சிம்’ மட்டும் தான் வைத்திருந்தேன் என கார்த்தி சிதம்பரம் கூறினார்.
கடந்த 2006-ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்குக் கட்டணி ஆட்சியில், மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்குப் பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு முதலீடு கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இதுதொடர்பாக, சிபிஐ அமைப்பும், அமலாக்கத் துறையும் கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவை, டெல்லி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி இன்று உத்தரவிட்டார்.
இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘இதை ஒரு வழக்காகவே கருத முடியாது. வெறும் அரசியல் பழிவாங்கும் எண்ணத்துடன் இந்த வழக்கை தொடுத்துள்ளனர். ஏர்சேல் மேக்சிஸ் முறைகேட்டில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. எனக்கு ஏர்செல் சிம்கார்டு மட்டும் இருந்தது. இருப்பினும் ஐஎன்எக்ஸ் பிரச்சினை எழுந்த பிறகு ஏர்செல் நெருக்கடிக்கு ஆளானதால் அது பயனற்று போனது’’ எனக் கூறினார்.