Published : 05 Sep 2019 11:07 AM
Last Updated : 05 Sep 2019 11:07 AM

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்; சிதம்பரத்தைக் கைது செய்யத் தயாராகும் அமலாக்கப் பிரிவு: முன் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி,

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து, அமலாக்கப் பிரிவும் சிதம்பரத்தைக் கைது செய்யத் தயாராகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமான வகையில் ரூ.305 கோடி முதலீடு வருவதற்கு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது உதவினார் என்று சிபிஐ, அமலாக்கப் பிரிவு தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ளார்.

அமலாக்கப் பிரிவு வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் 29-ம் தேதி தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்யும் ஆவணங்களை ஆய்வு செய்தபின் உத்தரவுகளை பிறப்பிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அமலாக்கப் பிரிவுக்கு எதிராக முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் பானுமதி ஏ.எஸ். போபண்ணா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பானுமதி, போபண்ணா அமர்வு, " ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு விசாரணை சரியான திசையில் செல்கிறது. விசாரணை அமைப்புகளுக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்க வேண்டும். முன் ஜாமீன் கோருவது என்பது அடிப்படை உரிமை இல்லை. விசாரணையின் தொடக்கத்திலேயே முன் ஜாமீன் வழங்குவது விசாரணையை குலைத்துவிடும். முன் ஜாமீன் வழங்க இது சரியான வழக்கு அல்ல. பொருளாதாரக் குற்ற வழக்கு வித்தியாசமானது. இதை வேறுவிதமாகத்தான் அணுக வேண்டும்.

சிதம்பரம் தரப்பில் கேட்கப்பட்ட ஆவணங்களை அமலாக்கப் பிரிவு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல விசாரணை விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தேவையில்லை. அமலாக்கப் பிரிவு சிதம்பரத்தைக் கைது செய்யத் தடையில்லை" என்று உத்தரவிட்டனர்.

இதற்கிடையே சிபிஐ நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்டில் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்தும், தன்னை ரிமாண்ட் செய்ததை எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு

மேலும் எர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேட்டில் சிபிஐ, அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் முன் ஜாமீன் தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x