Published : 03 Sep 2019 12:03 PM
Last Updated : 03 Sep 2019 12:03 PM

அயோத்தி வழக்கு; மூத்த வழக்கறிஞர் தவாணுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் உள்பட இருவருக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி,

ராமஜென்ம பூமி-பாபர் மசூதி சர்ச்சைக்குரிய நில வழக்கில் வக்பு வாரியம் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஆதரவாக வாதாடி வரும் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவணுக்கு எதிராக மிரட்டல் விடுத்த சென்னை ஓய்வுபெற்ற பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது

அயோத்தி வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நாள்தோறும் விசாரித்து வருகிறது. இன்று 18-வது நாளாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் வக்பு வாரியம் மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவண் ஆஜராகி வாதிட்டு வருகிறார்.

ராஜீவ் தவண் முஸ்லிம் அமைப்புகளுக்கு ஆதரவாக வாதிடுவதற்கு எதிராக கடந்த மாதம் 14-ம் தேதி சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் சண்முகம் என்பவரிடம் இருந்து மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதேபோல, ராஜஸ்தானைச் சேர்ந்த சஞ்சய் கலால் பஜ்ரங்கி என்பவரிடம் இருந்து வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வழக்கில் இருந்து விலகக் கூறப்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவண் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், "அயோத்தி வழக்கில் முஸ்லிம் அமைப்புகளுக்கு ஆதரவாக வாதாடி வரும் தனக்கு சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் என்.சண்முகம் என்பவரிடம் இருந்து மிரட்டல் கடிதம் வந்தது. அதேபோல, வாட்ஸ் அப்பில் சஞ்சய் கலால் பஜ்ரங்கி என்பவரிடம் இருந்து மிரட்டல் வந்தது.

உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் சார்பாக ஆஜராகி வாதாடி வரும் மூத்த வழக்கறிஞருக்கு எதிராக இதுபோன்ற மிரட்டல்கள் வருவது கிரிமினல் நடவடிக்கை. வழக்கறிஞரின் கடமையைச் செய்யவிடாமல் தடுப்பதாகும். இதுதொடர்பான கடிதத்தின் நகலையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.

ஆதலால், இதை நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும். இந்த மனுத் தாக்கல் செய்யும் முன்பாக, அட்டர்னி ஜெனரலிடம் அனுமதி பெறவில்லை. அவர் உத்தரப் பிரதேசத்தில் அயோத்தி வழக்கு தொடர்பான விசாரணையில் இருக்கிறார்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் ஏற்றுக்கொண்டிருந்தார். இந்த மனு அரசியல் சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவணுக்கு மிரட்டல் விடுத்த சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் சண்முகம் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த சஞ்சய் கலால் பஜ்ரங்கி ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x