Published : 01 Sep 2019 09:23 AM
Last Updated : 01 Sep 2019 09:23 AM

ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை; ரூ.100 கோடி அபராதம்: மகாராஷ்டிர நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை

மகாராஷ்டிர வீட்டு வசதி திட்ட ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.100 கோடி அபராதம் விதித்து அந்த மாநில நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும் 47 பேருக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 1997-ம் ஆண்டில் மகாராஷ்டிராவின் ஜல்கோன் நகராட்சியில் ஏழைகளுக்காக 11,424 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்த திட்டத்தில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சுரேஷ் ஜெயின், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் குலாபிரோ தியோகர் ஆகியோர் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இருவரும் முன்னாள் அமைச்சர்கள் ஆவர்.

இந்த வீட்டு வசதி திட்டத்தில் சுமார் ரூ.30 கோடி வரை ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சுரேஷ் ஜெயின், குலாபிரோ தியோகர், நகராட்சியின் அப்போதைய கவுன்சிலர்கள் உட்பட 90 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த ஊழல் வழக்கு துலே மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பல ஆண்டுகள் நீடித்த இவ்வழக்கில் சிறப்பு நீதிபதி சுருதி நீல்கண்ட் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ் ஜெயின், குலாபிரோ தியோகர் உட்பட 48 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். ஜாமீனில் உள்ள அவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்யும்படி போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

பிற்பகலில் குற்றவாளிகளுக்கான தண்டனையை நீதிபதி அறிவித்தார். இதில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ஜெயினுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மற்றொரு முன்னாள் அமைச்சர் குலாபிரோ தியோகருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதர 46 குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x