Published : 31 Aug 2019 12:00 PM
Last Updated : 31 Aug 2019 12:00 PM

டெல்லியிலும் சட்டவிரோத குடியேறிகள்; தேசிய குடிமக்கள் பதிவேடு தேவை: பாஜக வலியுறுத்தல்

புதுடெல்லி
டெல்லியிலும் சட்டவிரோத குடியேறிகளால் ஆபத்து ஏற்பட்டு வருகிறது, எனவே இங்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்பட வேண்டும் என அம்மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிபட்டியல் இன்று வெளியிடப்பட்டது. வரைவு பட்டியலில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இறுதிபட்டியலில் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
வரைவு பட்டியலில் பெயர் விடுபட்ட 3,68,000 பேர் ஏற்கெனவே விண்ணப்பிக்கவில்லை அவர்களையும் சேர்த்து மொத்தம் 19,06,657 பேர் இறுதிபட்டியலில் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு பட்டியலில் நீக்கப்பட்ட 22 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அசாம் மாநிலத்தைப் போல டெல்லியிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்பட வேண்டும் என டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “டெல்லியில் நிலைமை மோசமடைந்து வருகிறது. பல நாட்டினரும் சட்டவிரோதமாக குடியேறும் சூழல் உள்ளது. அவர்களை கண்காணிக்கவும் கணக்கெடுத்து நடவடிக்கை எடுப்பதும் அவசியம். எனவே டெல்லியில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பது அவசியம். இங்கு நிரந்தரமாக தங்கியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள் மிகவும் ஆபத்தானவர்கள். அதனால் இங்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவது அவசியம். இதனை மத்திய அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x