

என்.மகேஷ்குமார்
திருப்பதி
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ராஜி னாமா செய்ய சமீபத்தில் ஆந்திர மாநில முதன்மை செயலாளர் வாய்மொழியாக உத்தரவிட்டார். அதன்படி, வேற்று மத ஊழியர்கள் 46 பேர் பதவி விலகுவார்களா என்று பரபரப்பு எழுந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடைநிலை ஊழியர்கள் முதற்கொண்டு, தேவஸ்தான உயர் அதிகாரிகள் வரை யிலும் போலீஸ் உயர் அதிகாரிகள், கண் காணிப்பு அதிகாரிகள் என அனைத்து துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இந்துக்களாகவே நியமனம் செய்யப் படுவார்கள். ஏனெனில் குடியரசுத் தலை வர், பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆளுநர், மாநில முதல்வர்கள், சினிமா பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்கள் வரும்போது அவர்களுடன் கோயிலுக் குள் பாதுகாப்புக்குச் செல்வதால், இவர் கள் இந்துக்களாகவே நியமனம் செய்யப் படுவது வழக்கம். திருமலையில் வேற்று மதப் பிரச்சாரம் உட்பட தர்ணாக்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற வையும் தடை செய்யப்பட்டுள்ளன.
ஆனால், சில ஊழியர்கள் பணியில் சேர்ந்த பின்னர், வேற்று மதத்துக்கு மாறி யது தெரியவந்துள்ளது. இப்பிரச்சினை குறித்து ஏற்கெனவே சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆயினும் அவர்கள் தங்களது புதிய மதத்தை கைவிட மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தைச் சேர்ந்த மொத்தம் 46 ஊழியர்கள் பணியாற்றுவது ஓர் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இவர்கள் தற்போது தேவஸ்தானத்தின் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றி வரு கின்றனர். சிலர் தேவஸ்தான அலு வலகத்தில் பணியாற்றுகின்றனர்.
இந்த பிரச்சினையை எப்படி கையாள் வது என தேவஸ்தான உயர் அதிகாரி கள் குழம்பி போயிருந்த சமயத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏழுமலை யானை தரிசிக்க திருமலைக்கு வந்தார் மாநில முதன்மை செய லாளர் எல்.வி.சுப்ர மணியம். பின்னர் அவர் வேற்று மத ஊழியர்கள் குறித்த விவரங்களை தேவஸ் தான அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறும்போது, ‘‘மதம் மாறுவதை நாங்கள் குறை கூறவில்லை. ஆனால், இந்துக்களின் மிகப்பெரிய திருத்தலமான திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாற்று மதத்தினர் பணியாற்றுவதை இந்துக்கள் விரும்ப மாட்டார்கள். அவர்களது மனம் புண்படும்படி நாம் நடந்து கொள்ளக் கூடாது. எந்த மதத்தையும் நாங்கள் குறை கூறவில்லை. இங்கு பணியாற்றும் வேற்று மதத்தைச் சேர்ந்த ஊழியர்கள் தயவு செய்து தங்களது பணியை ராஜினாமா செய்து விடுங்கள். ‘நாங்கள் இந்துதான்’ என நீங்கள் எங்களை நம்பவைக்க முயற்சி செய்தால், நாங்கள் அடிக்கடி உங்களது வீடுகளில் சோதனையிட வேண்டி இருக்கும். உங்களை இரவு பகலாக கண்காணிக்க வேண்டி வரும்’’ எனக் கூறினார். இதனால், மதம் மாறிய ஊழியர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. நீதிமன்றத்தை நாடுவார்களா என்ற பரபரப்பும் ஏற்பட் டுள்ளது.
சமீபத்தில் திருப்பதி - திருமலை இடையே இயக்கப்படும் ஆந்திர அரசுப் பேருந்து டிக்கெட்டின் பின்புறம் ஜெருசலேம் மற்றும் ஹஜ் யாத்திரை செல்வதற்கான விளம்பரம் அச்சிடப் பட்டிருந்தது. இது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.