

திஸ்பூர்
அசாம் குடிமக்கள் தேசிய பதிவேடு இறுதிபட்டியல் நாளை காலை வெளியிடப்படும் நிலையில் மக்கள் அச்சப்பட வேண்டாம், உண்மையான இந்திய குடிமக்கள் பெயர் விட்டுப்போகாமல் உறுதி செய்யப்படும் என அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனவால் கூறியுள்ளார்.
அசாமில் உள்ள வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு அம்மாநிலத்தில் குடிமக்கள் தேசிய பதிவேடு கொண்டு வரப்பட்டது. இதில், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து 6 ஆண்டுகளாக வசித்து வரும் இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அசாம் மட்டுமின்றி வட கிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட குடிமக்கள் தேசிய பதிவேடு வரைவு பட்டியலில் 40 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் அகற்றப்பட்டது. அப்போது பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தநிலையில், தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிபட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. அசாமில் ஒருவித பதற்றம் நிலவுகிறது.
இந்தநிலையல் அசாம் முதல்வர் சர்பானந்த சோனவால் கூறியதாவது:
‘‘தேசிய குடிமக்கள் பதிவேடு நாளை வெளியிடப்படுகிறது. உண்மையான இந்திய குடிமக்களின் பெயர்கள் விடுபட்டு விடக்கூடாது என்பதில் அரசு அக்கறை செலுத்துகிறது. எனவே மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், பதற்றப்படவும் தேவையில்லை.
யாருடைய பெயராவது இறுதிப்பட்டியலில் விடுபட்டு இருந்தால் அவர்கள் தங்கள் பெயரை சேர்க்க உரிய கால அவகாசம் வழங்கப்படும்.
சர்ச்சைக்குரிய விண்ணப்பங்கள் இருந்தாலும் கூட அவர்கள் வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயத்தில் முறையிட்டு தீர்வு பெற வாய்ப்புள்ளது’’ எனக் கூறினார்.