Published : 29 Aug 2019 12:40 PM
Last Updated : 29 Aug 2019 12:40 PM
கந்துவா (மத்தியப் பிரதேசம்)
மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் கழிப்பறையைச் சுத்தம் செய்த வீடியோ வைரலான நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள மாவட்ட ஆட்சியர் ''அப்படி செய்வதில் ஒன்றும் தவறில்லை'' என்றார்.
கந்துவா மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியின் கழிப்பறையை மாணவர்களே சுத்தம் செய்யவேண்டுமென பள்ளி நிர்வாகமே உத்தரவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம், மாணவர்கள் சிலர் பள்ளிக்கூடத்தின் கழிப்பறையைச் சுத்தம் செய்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ பதிவிற்கு வலைதளங்களில் கடும் எதிர்ப்பு உருவானது.
இதுகுறித்து கந்துவா மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ''மாணவர்களுக்குத் தூய்மை குறித்து நடைமுறைக் கல்வி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட உத்தரவிட்டிருக்கலாம். அதில் ஒன்றும் தவறில்லை'' என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே இதேபோன்று கழிப்பறையைச் சுத்தம் செய்யவும், ஆசிரியர்களின் உணவு பாத்திரங்களைக் கழுவச் செய்யவும் மாணவர்களை வேலை வாங்குவதாக புகார்கள் எழுந்தன.
தற்போது செயல்முறைக் கல்வி என்ற பெயரில் மாணவர்கள் கழிப்பறையைச் சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்றும், இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT