உச்ச நீதிமன்ற அனுமதி: காஷ்மீர் புறப்பட்டுச் சென்றார் யெச்சூரி

உச்ச நீதிமன்ற அனுமதி: காஷ்மீர் புறப்பட்டுச் சென்றார் யெச்சூரி
Updated on
2 min read


புதுடெல்லி
உச்ச நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து ஸ்ரீநகரில் தனது கட்சியின் நிர்வாகி முகமது தாரிகாமியை சந்திப்பதற்காக மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.

உச்ச நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று காஷ்மீர் மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பில் 370 பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தையும் இரண்டாகப் பிரித்து இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.

மாநிலத்தில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான பாதுகாப்பு கெடுபிடிகளை காஷ்மீர் நிர்வாகம் ஏற்படுத்தியது. தற்போது காஷ்மீரில் இயல்புநிலை மெல்ல திரும்பி வருவதால், பாதுகாப்பு கெடுபிடிகளை போலீஸார் தளர்த்தி வருகின்றனர்.

இந்தநிலையில், காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது தாரிகாமியின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவரை பார்க்க தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறி அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் சென்று நண்பர்களை, உறவினர்களை சந்திக்க அனைவருக்கும் உரிமை உண்டு. சீதாராம் யெச்சூரி தாராளமாக சென்று தனது நண்பரை பார்க்கலாம். வந்த பிறகு நண்பரின் நிலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கலாம்.

ஆனால் அவரது பயணம் தனிப்பட்ட பயணமாக தான் இருக்க வேண்டும். அரசியல் நிகழ்வு எதிலும் அவர் பங்கேற்க கூடாது’’ என உத்தரவு பிறப்பித்தது.

உச்ச நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து சீதாராம் யெச்சூரி இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்றார். ஸ்ரீநகர் விமான நிலையம் சென்ற பிறகே அவரது பயண விவரம் தெரிய வரும். அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதால் காஷ்மீர் போலீஸ் வழிகாட்டுதல் படி அவர் பயணம் மேற்கொள்ளக்கூடும் எனத் தெரிகிறது.

தாரிகாமியை சந்தித்து விட்டு அவர் இன்றே புதுடெல்லி திரும்பக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தனது பயணத்திட்டம் குறித்து தகவல்கள் எதையும் அதிகாரபூர்வமாக சீதாராம் யெச்சூரி அறிவிக்கவில்லை.

சீதாராம் யெச்சூரி ஸ்ரீநகர் சென்று திரும்பினால் அங்கு கட்டுப்பாடுகள் அமலான பிறகு சென்று வரும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர் யெச்சூரியாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக ஸ்ரீநகர் சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு டெல்லி திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in