Published : 28 Aug 2019 05:00 PM
Last Updated : 28 Aug 2019 05:00 PM

சிட்னி விமான நிலைய கடையில் மணிபர்ஸ் திருடிய புகார்: ஏர் இந்தியா மண்டல இயக்குநருக்கு கட்டாய பணி ஓய்வு

ஏர் இந்தியா மண்டல இயக்குநர் ரோஹித் பாஷின்

புதுடெல்லி

சிட்னி விமான நிலையத்தில் உள்ள டூட்டி பிரீ கடையில் மணிபர்ஸ் ஒன்றை திருடிய புகாருக்கு ஆளான ஏர் இந்தியாவின் மண்டல இயக்குநர் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டு பணியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனத்தின் கிழக்கு பகுதி மண்டல இயக்குநர் ரோஹித் பாஷின். இவர் கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு சென்றுள்ளார்.

விமான நிலையத்தில் உள்ள உள்ளூர் வரிகள் விதிக்கப்படாத பொருட்களை விற்பனை செய்யும் ‘டூட்டி பிரீ’ கடைக்குச் சென்று பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது அந்த கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மணிபர்ஸ் ஒன்றை அவர் திருடியுள்ளார்.

அங்கிருந்த சிசிவி கேமராக்களில் அவர் திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து ஆஸ்திரேலிய போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த விவகாரத்தால் சிட்னி விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பெரும் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து ரோஹித் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. ஏர் இந்தியா நிர்வாகம் நடத்திய விசாரணையில் ரோஹித் திருடியது உறுதியானது. இதையடுத்து அவர் மீதான பணியிடை நீக்க உத்தரவை வாபஸ் பெற்று, அதற்கு பதிலாக கட்டாய ஓய்வில் அவர் பணியில் இருந்து 31-ம் தேதி விடுக்கப்படுகிறார்.

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு ஏர் இந்தியாவின் தலைவர் அஸ்வினி லோஹனியை சந்தித்து தன்னை விருப்ப ஓய்வில் செல்ல அனுமதிக்குமாறு வேண்டிக் கொண்டார்.

விருப்ப ஓய்வில் சென்றால் அவருக்கு வழக்கமான பண பயன்கள் கிடைக்கும். ஆனால் இதனை ஏற்க முடியாது என அஸ்வினி லோஹனி தெரிவித்து விட்டார். இதைத்தொடர்ந்து அவர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட உள்ளார்.

இதன்படி ரோஹித்துக்கு எந்த பணப் பயன்களும் கிடைக்காது. வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக் கொடை தொகை மட்டுமே அவர் பெற இயலும். இதைத்தவிர விடுமுறை நாட்களுக்காக தொகை உள்ளிட்ட பிற பணப்பயன்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படும் என ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x