Published : 26 Aug 2019 12:03 PM
Last Updated : 26 Aug 2019 12:03 PM

வெளிநாடுகளில் ப.சிதம்பரத்துக்கு 17 பினாமி வங்கிக் கணக்குகள்,10 இடங்களில் சொத்துக்கள்: அமலாக்கப்பிரிவு தகவல்

சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்: படம் பிடிஐ

புதுடெல்லி,
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யபட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு வெளிநாடுகளி்ல் 17 பினாமி வங்கிக் கணக்குகளும், 10 இடங்களில் விலை உயர்ந்த சொத்துக்களும் உள்ளதாக அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், சட்டவிரோதமாக வரும்பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காகவே, போலி நிறுவனங்களை உருவாக்கியதாக அமலாக்கப்பிரிவினர் தெரிவிக்கின்றனர்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் சிபிஐ விசாரணையில் உள்ளார். இன்று அவருக்கான சிபிஐ காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது, மேலும், தனக்கு விதிக்கப்பட்டுள்ள ரிமாண்டையும் ரத்து செய்யவும் சிதம்பரத்தில் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கப்பிரிவு சார்பில் ப.சிதம்பரத்துக்கு எதிராக ஏராளமான ஆதாரங்களைத் திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை வைக்கப்போவதாகவும் கூறப்படுகிறது..

இதுகுறித்து அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் நிருபரிடம் கூறுகையில் " ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் இருவரும் சட்டவிரோதமாக வரும் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காகவே போலியாக நிறுவனங்களை உருவாக்கி அதில் பங்குகளை மாற்றி இருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் ப.சிதம்பரத்துக்கு 17 பினாமி வங்கிக்கணக்குகளும், 10 விலைஉயர்ந்த சொத்துக்களும் இருக்கின்றன என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால் வெளியே வந்து ஆதாரங்களை தனது செல்வாக்கு மூலம் அழிக்க முயற்சிப்பார் என்று அமலாக்கப்பிரிவு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் வைக்கப்படும்.

குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக ஆதாரங்களும் தேவை, அந்த ஆதாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
குற்றம்சாட்டப்பட்டவர்களின் எந்தவிதமான தாக்கமும் இல்லாமல் சாட்சிகளும், ஆதாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் அமலாக்கப்பிரிவு நீதிமன்றத்தில் தெரிவிக்கும்.

அதேசமயம், குற்றம்சாட்டப்பட்டவருடன் எந்தவிதமான ஆதாரங்களையும் பகிர்ந்துகொள்ளவும் விரும்பவில்லை என்றும் நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு தெரிவிக்கும்.

மிகவும் தீவிரமான சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்பதால், எந்தவிதமான ஆதாரங்களையும் வெளிப்படுத்த விரும்பவில்லை. நீதிபரிபாலனத்தில் சிறிய பிழை ஏற்பட்டால்கூட சதித் திட்டங்களை விசாரணை அமைப்புகள் வெளிக்கொண்டுவர முடியாமல் போய்விடும் என்பதால் கவனமாக செயல்படுகிறோம் " எனத் தெரிவித்தனர்.


ஐஏஎன்எஸ்

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x