

அமராவதி
ஆந்திராவில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி முந்தைய தெலுங்கு தேசம் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து தோண்டி எடுத்து விசாரித்து வருகிறார். தலைமைச் செயலகம் கட்டிய ஊழல் தொடங்கி பல ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் ஆந்திர சட்டப்பேரவையில் இருந்து பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்கள் புதிய தலைநகரான அமராவதி சட்டப்பேரவை கட்டிடத்துக்கு மாற்றும் போது அவை மாயமானதாக புகார் எழுந்தது.
ஆந்திராவில் தெலுங்குதேச ஆட்சியின் போது சபாநாயகராக இருந்த கோடலா சிவபிரசாத் இவற்றை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டதாக கூறப்பட்டது. இதில் பல இருக்கைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மரங்களில் செய்யப்பட்டவை.
சட்டப்பேரவையில் இருந்து 4 வாகனங்களில் ஏற்றப்பட்ட பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்கள் சிவபிரசாத்தின் வீடு மற்றும் அவரது மகனின் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்து, அவற்றை பயன்படுத்தி வருவது தெரிய வந்தது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள ஆந்திரப் போலீஸார், சட்டப்பேரவையில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சிவபிரசாத்தை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.