Published : 25 Aug 2019 03:42 PM
Last Updated : 25 Aug 2019 03:42 PM

வரும் 27-ம் தேதி காஷ்மீர் செல்கிறது சிறுபான்மை விவகார அமைச்சகம் சார்பிலான குழு:மத்திய அமைச்சர் நக்வி தகவல்

புதுடெல்லி,
மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களை எங்கெங்கு நடைமுறைப்படுத்தலாம் என்பதை அறிவதற்காக சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் சார்பிலான குழு வரும் 27, 28-ம் தேதிகளில் காஷ்மீர் செல்கிறது என்று மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபின் மத்திய அரசின் குழு அங்கு செல்வது இதுதான் முதல் முறையாகும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பு பிரிவு 370 பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது மத்திய அரசு.

மாநிலத்தில் எந்த விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்காமல் தடுப்படுதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை, பாதுகாப்பு கெடுபிடிகளை மாநில நிர்வாகம் வகுத்துள்ளது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் காஷ்மீர் செல்ல முயன்றபோது அவர்களை அனுமதிக்க மாநில நிர்வாகம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தும் பகுதிகளை அடையாளம் காண்பதற்காக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பில் ஒரு குழுவினர் வரும் 27,28-ம் தேதி காஷ்மீர் செல்லகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, 370 பிரிவை திரும்பப் பெற்றது ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் அரசியல்ரீதியாக தவறான நினைத்து விமர்சிக்கிறார்கள். ஆனால், நாங்கள் செயல்படுத்தும் திட்டங்களால் ஏற்படும் தாக்கத்தைப் பார்த்து அவர்களாகவே வந்து ஆதரிப்பார்கள்.

சிறுபான்மை விவாகரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், செயலாளர் ஆகியோர் இந்த பயணத்தில் உடன் செல்கிறார்கள். காஷ்மீரில் பள்ளிகள்,கல்லூரிகள், திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் எங்க அமைக்கலாம் ஆகியவற்றை அடையாளம் காண்பார்கள். சமூக மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த அனைத்து சாதமான அம்சங்களையும் நோக்குவார்கள்.

பிரிவினைவாதிகள் கைகளில் சிக்கி மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என்பதற்காகவே, ஜம்மு காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எந்த விதமான தவறான தகவல்களும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதற்காக ஒரு பொறுப்பான அரசின் பணியாகும்.

எங்கள் குழு முதலில் காஷ்மீர் மட்டும் செல்கிறது, லடாக், ஜம்முவுக்கு பின்னர் செல்வார்கள் அதற்கான தேதி அறிவிக்கப்படும்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த அரசியலமைப்பு 370 பிரிவை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை, இது பிரதமர் மோடியின் அரசு.

இந்த அரசில் அங்கம் வகித்திருக்கும் அனைவருக்கும் தெரியும், அரசு எந்த முடிவையும் நீண்ட ஆலோசனைக்குப்பின்தான் எடுக்கிறது. ஆதலால், முடிவுகளை திரும்பப் பெறும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

நாங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு காஷ்மீர் மக்கள் முழுமையாக ஆதரவு தருகிறார்கள். 370 பிரிவை திரும்பப் பெற்றதன் மூலம், ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதியில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சித்திட்டங்களை கொண்டுவர சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த மாநிலத்துக்கு இனிமேல் பிரதான் மந்திரி ஜன் விகாஸ் கர்யாக்ராம் திட்டம் கொண்டு வரப்படும். இந்த திட்டத்தின் மூலம் அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு சமூகப் பொருளாதார உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும், அடிப்படை வசதிகள் உருவாக்கப்படும்.

லே, லடாக், கார்கில், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதி முழுவதும் அமைச்சகம் தீவிரமாகச் செயல்படும். பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவமனைகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏராளமான வசதிகளை ஏற்படுத்த நினைத்தோம் ஆனால், 370 பிரிவால் கொண்டுவர முடியவில்லை. ஆனால், இனிமேல் இதுசாத்தியமாகும்.

சில எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் 370 பிரிவை திரும்பப் பெற்றதால், மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்படும் என்று கூறினார்கள். ஆனால் அதற்கு எதிர்மாறாகவே நடந்து வருகிறது, மக்கள் வரவேற்கிறார்கள்.

370 பிரிவு மக்களுக்கு எதையும் வழங்கிவிடவில்லை, ஆனால், ஜம்மு காஷ்மீர், லடாக்கை எடுத்துக்கொண்டது.கல்வி, வேலைவாய்ப்பு, மனித உரிமைகள், சிறுபான்மை, குழந்தைகள் உரிமை உள்ளிட்ட 100க்கும் மேலான சட்டங்கள் 370 பிரிவு இருந்தபோது இங்கு அமலாகவில்லை. இந்த மாநிலத்தின் மக்களின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் 370 பிரிவு தடையாக இருந்தது.

இவ்வாறு முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x