Published : 24 Aug 2019 08:11 AM
Last Updated : 24 Aug 2019 08:11 AM
என்.மகேஷ்குமார்
திருப்பதி
திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் அரசு பஸ்ஸில் வழங்கிய டிக்கெட்டில் ஹஜ் மற்றும் ஜெருசலேம் புனித யாத்திரைக்கான விளம்பரம் அச்சடிக்கப்பட்டிருந்ததால் தற்போது அது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல திருப்பதி-திருமலை இடையே ஆந்திர அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் இந்த பஸ்கள் மூலம் சென்று வருகின்றனர்.
தற்போது திருப்பதி-திருமலை இடையே ஒரு நபருக்கு ரூ. 55 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த புதன் கிழமை திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வழங்கிய டிக்கெட்டின் பின்புறம், முஸ்லிம்களின் புனித ஹஜ் யாத்திரை மற்றும் கிறிஸ்தவர்களின் புனித ஜெருசலேம் யாத்திரைக்கான விளம்பரம் செய்யப் பட்டிருந்தது.
இதனை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து உடனடியாக பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கும் அரசு போக்குவரத்துக் கழக திருப்பதி வட்டார மேலாளருக்கும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த டிக்கெட்டுகள் ஹைதராபாத்தில் அச்சிடப்பட்டு வந்ததால், இது குறித்து சரிவர கவனிக்கப்படவில்லை என்று போக்குவரத்துக் கழக வட்டார மேலாளர் தெரிவித்தார். ஆனால், இது வேண்டுமென்றே செய்யப்பட்ட தவறு என பாஜகவினர் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT