Published : 22 Aug 2019 03:10 PM
Last Updated : 22 Aug 2019 03:10 PM

சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் சிதம்பரம்

புதுடெல்லி
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் சற்று நேரத்தில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவரது மனைவியும் மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர்.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இதையடுத்து, முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை விசாரணை செய்யப்படும் என உச்ச நீதிமன்றம தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் சிதம்பரம் நேற்று இரவு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டுக் கதவு மூடியிருந்ததால் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து உள்ளே சென்று அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் நேற்று இரவு முழுவதும் அரசியல் பரபரப்பு காணப்பட்டது.

அவர் இன்னும் சற்று நேரத்தில் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதனால் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படுவதையொட்டி அவரது மனைவியும் மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர்.

மேலும் சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் உள்ளிட்டோரும் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x