Published : 22 Aug 2019 12:19 PM
Last Updated : 22 Aug 2019 12:19 PM

தனிப்பட்ட வஞ்சத்தை தீர்க்கிறது மத்திய அரசு: சிதம்பரம் கைது குறித்து காங்கிரஸ் காட்டம்

புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை கைதுசெய்ததன் மூலம் மத்திய அரசு தனிப்பட்ட வஞ்சத்தை தீர்க்க சிபிஐ, அமலாக்கப்பிரிவு ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ஐஎன்எஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்தவிட்டது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டினர். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ப.சிதம்பரம்,நேற்று முன்தினம் முதல் மாயமானார். இதனால் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவை லுக் அவுட்நோட்டீஸ் பிறப்பித்தன.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவும் நேற்று பட்டியலிடப்படாததால் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை. நாளைதான் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் நேற்று இரவு காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து ப.சிதம்பரம் பேட்டி அளித்து தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

அதன்பின் ப.சிதம்பரம் வீட்டுக்குச் சென்ற சிபிஐ அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். தான் திறந்து வைத்த சிபிஐ தலைமை அலுவலகத்திலேயே ப.சிதம்பரம் இரவு முழுவதும் தங்கவைக்கப்பட்டார். இன்று மாலை சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தொடரந்து சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அமைப்பு நேற்று இரவு கைது செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, அவரை இரவு முழுவதும் அவர்களின் அலுவலகத்தில் தங்க வைத்தனர். மத்திய அரசு தனது வஞ்சத்தை தீர்த்துக்கொள்வதற்காக சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு பயன்படுத்தி, ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளது.

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் 4 முறை சிபிஐ ரெய்டு நடத்தியுள்ளனர். 20 முறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார், கைது செய்யப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தனது மகளை கொலை செய்தமைக்காக சிறையில் அடைக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாக்குமூலத்தை வைத்து குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

நாட்டின் சரிந்துவரும் பொருளாதாரத்தை நினைத்து அதிர்ச்சி அடைந்திருக்கிறோம். பல நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன, ஏராளமானோர் வேலையிழந்து வருகின்றனர். இந்த விஷயங்களில் இருந்து மக்களின் கவனத்தை திருப்பும் முயற்சியாகவே இந்த கைது நடந்துள்ளது.

ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் அப்பாவி, குற்றமற்றவர். நாங்கள் சிதம்பரத்துக்கு ஆதரவாக இருப்போம். ஏராளமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடுகிறார். ஆனால் 40 ஆண்டுகளாக தேசத்துக்காகவும், வளர்ச்சிக்காவும் போராடியவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் பட்டப்பகலில் ஜனநாயகப் படுகொலை கடந்த இரு நாட்களாக நடக்கிறது.

இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்.

இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான சல்மான் குர்ஷித் நிருபர்களிடம் இன்று கூறுகையில், " ப.சிதம்பரம் கைது விஷயத்தில் நான் மிகவும் வேதனையும், வருத்தமும் அடைந்துள்ளேன். அதில் சிபிஐ நடந்து கொண்ட விஷயங்கள் வேதனைக்குரியவை. முன்ஜாமீன் வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. அதுவரை உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்கும்வரை பொறுத்திருக்க வேண்டும். சிதம்பரத்துக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை, அவர் விடுவிக்கப்படுவார் என்பதில் உறுதியாக நம்புகிறோம் " எனத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x