Published : 22 Aug 2019 10:24 AM
Last Updated : 22 Aug 2019 10:24 AM
புதுடெல்லி
மத்தியில் ஆளும் பாஜக அரசு எனது தந்தையை மட்டும் குறிவைக்கவில்லை, காங்கிரஸை குறி வைத்தே செயல்படுகிறது என கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதையடுத்து, அவரைக் கைதுசெய்ய சிபிஐ தீவிரம் காட்டி வந்தது. முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு வெள்ளிக்கிழமை அன்று விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சிதம்பரம் நேற்று இரவு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டுக் கதவு மூடியிருந்ததால் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து உள்ளே சென்று அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் நேற்று இரவு முழுவதும் அரசியல் பரபரப்பு காணப்பட்டது.
சிதம்பரம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் இருந்து இன்று காலை டெல்லி வந்தடைந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக அரசு எனது தந்தை சிதம்பரத்தை மட்டும் குறிவைத்து செயல்படுவதாக நான் நினைக்கவில்லை. மாறாக காங்கிரஸை குறி வைத்தே செயல்படுகிறது. முழுக்க முழுக்க அரசியல் காழ்புணர்வுடன் மத்திய அரசு செயல்படுகிறது. இந்திராணி முகர்ஜியையோ அல்லது பீட்டர் முகர்ஜியையோ நான் சந்தித்தது இல்லை ’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT