Published : 21 Aug 2019 10:34 PM
Last Updated : 21 Aug 2019 10:34 PM
புதுடெல்லி
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதையடுத்து, அவரைக் கைதுசெய்ய சிபிஐ தீவிரம் காட்டி வந்தது. முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு வெள்ளிக்கிழமை அன்று விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சிதம்பரம் இன்று இரவு 8.15 மணியளவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபில், சல்மான் குர்ஷித் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும், வழக்கறிஞர்களும் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு செய்தியாளர்களுக்கு சிதம்பரம் பேட்டியளித்தார். அப்போது சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர்.
ஆனால் அதற்குள்ளாக அவர் தனது டெல்லி இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அவரை பின் தொடர்ந்து சிபிஐ , அமலாக்கத்துறை அதிகாரிகளும் சென்றனர். சிறிது நேரத்தில் சிதம்பரம் டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.
அவர் வீட்டுக்குள் சென்ற பிறகு வீட்டுக்கதவு மூடப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து உள்ளே சென்றனர். அவர்களுடன் அமலாக்கத்துறை அதிகாரிகளும் உள்ளே சென்றனர். சிதம்பரம் பெரும் பரபரப்புக்கிடையே கைது செய்யப்பட்டார்.
சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெறும் எனத் தெரிகிறது. அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார் எனத் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT