Published : 21 Aug 2019 06:37 PM
Last Updated : 21 Aug 2019 06:37 PM

ஓய்வு ஐபிஎஸ் அதிகாரியை கொலை செய்ய சதி: பிஹார் எம்எல்ஏ மீது பிடிவாரண்ட், தலைமறைவு

பாட்னா

எம்எல்ஏ ஒருவர் தன்னை கொல்ல சதி செய்வதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு கேட்டுள்ளது பிஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏ தலைமறைவாகிவிட்டார்.

பிஹார் மொகாமா தொகுதியில் 2009-லிருந்து தொடர்ந்து எம்எல்ஏவாக பதவி வகிப்பவர் ஆனந்த் சிங். ஆரம்பத்தில் ஜனதா தளத்திலிருந்தவர் 2009-ல் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு தாவினார். அதிலிருந்து தொடர்ந்து தொகுதியில் வெற்றி பெற்றுவரும் ஆனந்த் சிங்கை தொகுதி மக்கள் சோட்டா சர்க்கார் (சின்ன அரசாங்கம்) என்று அழைக்கின்றனர்.

இவர் மீது கொலைக் குற்றம் உள்ளிட்ட பல கிரிமினல் வழக்குகள் உள்ன. கடந்த 2015-ம் ஆண்டு நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் புதிய கூட்டணியை அமைத்ததால் இவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 2018-ல் கட்சியிலிருந்து விலகினார். தற்போது தனித்து இயங்கி வருகிறார்.

தன்னைப்பற்றி காவல்துறைக்கு தகவல் அளித்து நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை கொலைச் செய்ய ஆனந்த் சிங் திட்டம் தீட்டியதாக அவர்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்ற வாரம் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் எம்எல்ஏ ஆனந்த் சிங் தன்னை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டுவதாக பாதுகாப்பு கேட்டு காவல்துறைக்கு கடிதம் மூலம் புகார் அளித்திருந்தார். பிஹார் காவல்துறை தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

“கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் அனந்த் சிங் ஏ.கே 56, ஏ.கே. 57 வகை துப்பாக்கிகள் வைத்திருப்பது தொடர்பான ரகசிய தகவல்களை காவல் துறைக்கு அளித்தேன். அதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் போலீஸார் சோதனை செய்தனர். தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் 26 துப்பாக்கி குண்டுகள் மீட்டெடுத்த பிறகு, எனது தகவல்கள் சரியானவை என்று நிரூபணமானது.

இதனால் ஆத்திரமடைந்த அவர் தற்போது பழிவாங்கும் நோக்கத்தோடு என்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டுவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. என்னை அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்துவிடுவார்கள் என்கிற அச்சத்தோடு உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழும் நிலையில் உள்ளேன்.

எம்எல்ஏ ஆனந்த் சிங்கால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது, அவரது கொலை சதித் திட்டத்திலிருந்து காவல்துறை எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்”

இவ்வாறு ஐபிஎஸ் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.

எம்எல்ஏ ஆனந்த் சிங் தன்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டி வருதாக பிஹாரைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் குமார் தாஸ் புகார் அளித்ததை அடுத்து புகாரை வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணைக்கு ஆஜராக ஆனந்த் சிங்கை அழைத்தனர். ஆனால் அவர் விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான ஆனந்த் சிங் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது வழக்கை விசாரித்த பாட்னா நீதிமன்றம் நேற்று (செவ்வாய்க்கிழமை) எம்எல்ஏ ஆனந்த் சிங் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸார் ஆனந்த் சிங்கை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x