Published : 21 Aug 2019 05:56 PM
Last Updated : 21 Aug 2019 05:56 PM

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை: உச்ச நீதிமன்றம் முடிவு

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கான முன் ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து, அவரைக் கைதுசெய்ய சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது. முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று காலை மூத்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நீதிபதிகள் சந்தானகவுடர், அஜய்ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி ரமணா கூறுகையில், முன்ஜாமீன் மனு மீது எந்தவிதமான முடிவும் எடுக்க முடியாது, அதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தார்.

ஆனால், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கை நாள்தோறும் விசாரித்து வருகிறது என்பதால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது.


அதன்பின் மதிய உணவுக்குப்பின் மீண்டும் நீதிபதி என்வி.ரமணா தலைமையிலான அமர்வு கூடியது. அப்போது மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி, முன்ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது நீதிபதி ரமணா கபில் சிபிலிடம், உங்கள் மனுவில் சிறு பிழை இருப்பதாக கூறப்பட்டது அதை சரி செய்து தாக்கல் செய்யுங்கள் என்றார். அதற்கு கபில் சிபில், அந்த பிழை சரி செய்யப்பட்டுவிட்டது என்று பதில் அளித்தார்.

உடனடியாக, பதிவாளர் சூர்யபிரதாப்பை அழைத்த நீதிபதி ரமணா மனுவில் உள்ள குறைகள் களையப்பட்டதா எனக் கேட்டார். அதற்கு பதிவாளர் பிழைகள் நீக்கப்பட்டு தற்போதுதான் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

பின்னர், நீதிபதி ரமணா பட்டியலில் இல்லாத மனுக்களை விசாரிக்க முடியாது என்று மறுத்தார். அப்போது அவர் கூறுகையில், " வழக்கமாக மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதிக்கு சென்று அவரின் பார்வைக்குப்பின்புதான் பட்டியலிடப்படும். காலையில் நாங்கள் அனுப்பிவிட்டோம். ஆனால் மனுவில் குறையிருந்தது. மாலைக்குள் பட்டியலிட்டால் மட்டுமே எங்களால் விசாரிக்க முடியும் இல்லாவிட்டால் விசாரிக்க இயலாது. இது எங்களின் கைகளில் இல்லை " எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில் சிபிஐ, மற்றும் அமலாக்கப்பிரிவு கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளன. அதாவது ப.சிதம்பரத்தின் ஜாமீன் குறித்து எந்தவிதமான உத்தரவு பிறக்கும் முன் தங்களின் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை வெள்ளிக்கிழமை விசாரணைக்காக
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பட்டியலிட்டுள்ளதாக நீதிமன்ற பதிவாளர் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து கபில் சிபல் உட்பட சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற வளாகத்தில் ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x