Published : 21 Aug 2019 04:51 PM
Last Updated : 21 Aug 2019 04:51 PM

சிதம்பரத்துக்கு சிக்கல் ஏற்படுத்திய ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: 2017 முதல் கடந்து வந்த பாதை

புதுடெல்லி,


காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு தற்போது சிக்கல் ஏற்படுத்தி இருக்கும் ஐஎன்எஸ் மீடியா வழக்கில் சிபிஐ, அமலாக்கப்பிரிவின் பிடி இறுகியுள்ளதால், முன்ஜாமீனுக்காக உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டியுள்ளார். ஆனால், அவரின் மனு இன்று விசாரணைக்கு ஏற்கப்படவில்லை.

ப.சிதம்பரத்துக்கு சிக்கல் ஏற்படுத்திய ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு குறித்து சுருக்கமாகப் பார்க்கலாம்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்த போது, கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது.

இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 2018-ம் ஆண்டில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யாமல் இருப்பதற்கு முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுனில் கவுர், கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி, தீர்ப்பை ஒத்திவைத்தார். முன்ஜாமீன் வழக்கில் நேற்று நீதிபதி கவுர் மனுவைத் தள்ளுபடி செய்தார். இதையடுத்து, முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம்(படவிளக்கம்)


2017, மே 17: ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக ரூ.305 கோடி நிதி பெற்றதாக கார்த்தி சிதம்பரம், அவரின் தந்தை ப.சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

2017, ஜூன் 16: வெளியுறவு மண்டல பதிவாளர் அதிகாரி(எப்ஆர்ஆர்ஓ) மற்றும் குடியேற்றப்பிரிவு ஆகியவே கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கியது.

2017, ஆகஸ்ட் 10: கார்த்தி சிதம்பரம் உள்பட 4 பேருக்கு எதிராக வழங்கப்பட்டு இருந்த லுக் அவுட் நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்தது.

2017,ஆகஸ்ட் 14: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வழங்கப்பட்டு இருந்த லுக் அவுட் நோட்டீஸை நிறுத்திவைத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

2017, ஆகஸ்ட் 18: ஆகஸ்ட் 23-ம் தேதி சிபிஐ முன் ஆஜராக வேண்டும் என்று கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2017, செப். 22: வெளிநாட்டுக்கு கார்த்திச் சிதம்பரம் செல்லக்கூடாது, அவருக்கு ஏராளமான வெளிநாட்டு வங்கிக்கணக்குகள் இருப்தால், சாட்சியங்களை அழித்துவிடுவார் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.

2017, அக்.9: இங்கிலாந்தில் உள்ள தனது மகளைச் சந்திக்க அனுமதி கேட்டும், எந்த வங்கிக்கும் செல்லமாட்டேன் என்று உறுதியளித்து கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். மேலும் பாஜக அரசு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

2017,நவ.20: இங்கிலாந்தில் தனது மகளுடன் கார்த்தி சிதம்பரம் இங்கிலாந்து செல்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

2017,டிசம் 8: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தனக்கு எதிராக சிபிஐ அனுப்பிய சம்மனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்

2018, பிப்16: கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சொத்துக்களை பராமரித்துவந்த அவரின் ஆடிட்டர் எஸ். பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார்

2018, பிப். 28: வெளிநாடு செல்ல முயன்ற கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, டெல்லிக்கு அழைத்துச் சென்றது.

2018, மார்ச் 23: 23 நாட்கள் சிறைவாசத்துக்குப்பின் கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தது.

2018, ஜூலை 25: ப.சிதம்பரத்தை கைது செய்ய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

2018, அக்.11: இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளி்ல ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தொடர்புடைய கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கியது.

இந்திராணி முகர்ஜி : (படவிளக்கம்)

2019, பிப்.22: ப.சிதம்பரத்தின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்றது சிபிஐ.

2019, மே 29: கார்த்தி சிதம்பரம் செலுத்திய ரூ.10 கோடியை திருப்பித் தரக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

2019, ஜூலை 11: ஐஎன்எஸ் மீடியா வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் இந்திராணி முகர்ஜி நீதிபதியிடம் அப்ரூபவராக மாற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

2019, ஆக்.1: டெல்லி இல்லத்தை காலிச் செய்யக் கோரி அமலாக்கப்பிரிவு அளித்த நோட்டீஸ்க்கு எதிராக கார்த்தி சிதம்பரம் மனுத் தாக்கல்

2019, ஆக.20: ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பதரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x