Published : 21 Aug 2019 03:15 PM
Last Updated : 21 Aug 2019 03:15 PM
ஜம்மு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு மாநகராட்சி மேயர்களுக்கு இணையமைச்சர் அந்தஸ்து வழங்கி அம்மாநில அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் காஷ்மீர் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.
இதையடுத்து, அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக அங்கு 144 தடையும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டன. அம்மாநில முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு கொஞ்சம் கொஞ்சமாக அமைதி திரும்பி வருகிறது.
இந்தநிலையில் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு மாநகராட்சி மேயர்களுக்கு இணையமைச்சருக்கு நிகரான அதிகாரம் வழங்கி கூடுதல் தலைமைச் செயலாளர் சுபாஷ் ஷிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘இரு மாநகராட்சி மேயர்களுக்கும் இணையமைச்சர் அந்தஸ்தில் செயல்படுவார்கள். அதற்கு ஏற்ற வகையில் நடைமுறைகள் மற்றும் அரசு பணி ஒதுக்கீடுகளிலும் மாற்றம் செய்யப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு தான உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஸ்ரீநகர் மேயராக மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜூனையத் மாத்துவும், ஜம்மு மேயராக பாஜகவைச் சேர்ந்த சந்திர மோகன் குப்தாவும் தற்போது பதவி வகித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT