Published : 21 Aug 2019 11:54 AM
Last Updated : 21 Aug 2019 11:54 AM

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைப்பதில் இழுபறி: உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு

புதுடெல்லி,

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

ப.சிதம்பரம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அமலாக்கப்பிரிவு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க இயலாது இதை தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்புவதாக நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துவிட்டார். இதனால் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கான முன் ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து, அவரைக் கைதுசெய்ய சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது. முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று காலை மூத்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ப.சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்ககாகக் கருதி விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கில் அமலாக்கப்பிரிவு, சிபிஐ சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார். அவர் வாதிடுகையில் " ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணம் மிகப்பெரிய அளவில் பரிமாற்றப்பட்டுள்ளது,மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ, அமலாக்கப்பிரிவு கைது செய்வதில் இருந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக நீதிமன்றம் தடுத்துள்ளது " எனத் தெரிவித்தார்.

அப்போது வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், " ஐஎன்எக்எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு எந்தவிதமான பாதுகாப்பும் வழங்க முடியாது என்று உயர் நீதிமன்றம் அறிவித்து, உச்ச நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருப்பதால், ப.சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது. நள்ளிரவில் 2 மணிஅளவில் ப.சிதம்பரத்தின் வீட்டுக்குச்சென்று சிபிஐ நோட்டீஸ் ஒட்டி இருக்கிறது. 2 மணிநேரத்தில் ஆஜராக வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் எனத் தெரிந்திருந்தும் நோட்டீஸ் ஒட்டியுள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதி ரமணா, இந்த வழக்கில் எந்தவிதமான உத்தரவும் தன்னால் பிறக்க முடியாது, இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வுக்கு மாற்றுகிறேன் என அறிவித்தார்.

இதற்கிடையே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு தற்போது அயோத்தி வழக்கை விசாரித்து வருகிறது. ஆதலால், உடனடியாக ப.சிதம்பரம் ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டது. இதையடுத்து, நண்பகல் 2 மணிக்கு மேல் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு முன் முறையிடுவார் எனத் தெரிகிறது.

மேலும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு இந்த வழக்கை விசாரிக்காமல் வேறு அமர்வுக்கு மாற்றக்கூடும் என்று நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதுகுறித்து விரிவான தகவல் இல்லை.

இதற்கிடையே ப.சிதம்பரம் கைது செய்வதற்கான பலமான வாய்ப்புகள் உருவாகி இருப்பதால் அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுக்கும்வகையில் அமலாக்கப்பிரிவு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதன்படி ப.சிதம்பரம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களில் உள்ள அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்படும்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x