Published : 20 Aug 2019 02:48 PM
Last Updated : 20 Aug 2019 02:48 PM

‘‘இடஒதுக்கீடு; ஆர்எஸ்எஸ் நோக்கம் ஆபத்தானது’’ - பிரியங்கா கடும் சாடல்

புதுடெல்லி


பல்வேறு சட்டங்களை மத்திய பாஜக அரசு ரத்து செய்து வரும் நிலையில் இடஒதுக்கீடு குறித்த விவாதம் நடத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அழைப்பு விடுத்துள்ளது ஆபத்தானது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா விமர்சித்துள்ளார்.

டெல்லியில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ‘‘இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவிப்போரும் எதிர்ப்பு தெரிவிப்போரும் மனம் திறந்து பேச வேண்டும். ஆதரவாக இருப்பவர்கள் எதிர்ப்பவர்களின் நலனை மனதில் கொள்ள வேண்டும்.

அதேபோல் எதிர்ப்பவர்கள் ஆதரிப்போரின் நலனை மனதில் கொள்ள வேண்டும்’’ என கூறியிருந்தார். அவரது கருத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேராவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘ஆர்எஸ்எஸின் நோக்கமும், திட்டமும் ஆபத்தானது. மத்திய பாஜக அரசு சட்டங்களை ரத்து செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் இடஒதுக்கீடு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என கருத்தை கூறியிருப்பது ஆபத்தான ஒன்று.

இடஒதுக்கீடு குறித்து விவாதம் என்ற ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் அழைப்பே அதன் மீது குறி வைக்கப்பட்டு விட்டது என்றே பொருள். இதனை எப்படி மக்கள் அனுமதிப்பார்கள்.

பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கருத்தை பிரதமர் மோடியும் அவரது அரசும் ஏற்றுக் கொள்ளாது என உறுதியாக எண்ணுகிறேன். ஏனெனில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் எந்த பேச்சுவார்த்தைக்கும் மோடி தயாராக இல்லை.

குறைந்தபட்சம் அங்கு பிரச்சினை இருப்பதை கூட அவர்கள் ஏற்கவில்லை. அப்படியானால் பேச்சுவார்த்தை என்ற ஆர்எஸ்எஸ் கருத்தையும் ஏற்பார்களா’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x