Published : 19 Aug 2019 05:09 PM
Last Updated : 19 Aug 2019 05:09 PM
புதுடெல்லி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் நீண்டகாலமாக மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்து வந்தார். தொடர்ந்து அசாம் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவரின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தது.
அசாமில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில் அங்கிருந்து மன்மோகன் சிங் மீண்டும் தேர்வு செய்ய போதிய எம்எல்ஏக்கள் பலம் இல்லை. இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக எம்.பி. மதன்லால் அண்மையில் காலமானார்.
இதனால் ஏற்பட்ட காலி இடத்துக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் அந்த காலியிடத்துக்கு மன்மோகன் சிங்கை நிறுத்த காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது.
இதையடுத்து மன்மோகன் சிங் ஆகஸ்ட் 13 -ம் தேதி மனு தாக்கல் செய்தார். மனுவை வாபஸ் பெற கடைசி நாளான இன்று வேறு யாரும் அங்கு மனுத்தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து அவர் போட்டியின்றி தேர்வாகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மன்மோகன் சிங்குக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT