Published : 19 Aug 2019 04:48 PM
Last Updated : 19 Aug 2019 04:48 PM

விமானங்களுக்கு வழித்தடம் ஒதுக்கியதில் முறைகேடு புகார்: சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் 

புதுடெல்லி

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விமானங்களுக்கு வழித்தடங்கள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்த புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3500 கோடி முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (எஐபிபி) அனுமதி கோரியது. இதில் ப.சிதம்பரம் விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாகவும் இதன் மூலம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி உள்ளிடோருக்கு எதிராக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்த வழக்குகளில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தியை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதுபோலவே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலும் சிதம்பரம் மீது விசாரணை நடைபெற்றது வருகிறது.

இந்தநிலையில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விமானப்போக்குவரத்து துறையில்முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது விமான போக்குவரத்து துறை அமைச்சராக தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த பிரபுல் பட்டேல் இருந்தார்.

அந்த சமயத்தில் தனியார் விமான நிறுவனங்களுக்கு லாபகரமான வழித்தடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதனால் அரசு நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து இடைத்தரகராக செயல்பட்ட தீபக் தல்வார் என்பவரை கைது செய்தது.

பிரபுல் பட்டேலிடமும் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸைச் சேர்ந்த ப.சிதபரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஆகஸ்ட் 23-ம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x