Published : 19 Aug 2019 12:23 PM
Last Updated : 19 Aug 2019 12:23 PM

‘‘இனி அடுத்த இலக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தான்’’- மத்திய அமைச்சர் உறுதி

ஜம்மு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைப்பதுதான் இனி அடுத்த இலக்கு என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் காஷ்மீர் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.

இதையடுத்து, அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக அங்கு 144 தடையும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டன. அம்மாநில முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு கொஞ்சம் கொஞ்சமாக அமைதி திரும்பி வருகிறது.

இந்நிலையில் ஜம்முவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உதம்பூர் தொகுதி எம்.பி.யும் மத்திய அமைச்சருமான ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

''காஷ்மீருக்கு வழக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை. இதை எதிர்ப்பவர்கள் நாட்டின் ஒற்றுமையை எதிர்ப்பவர்கள். காஷ்மீரில் பிரச்சினையை எழுப்ப வேண்டும் நினைப்பவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் தவறு ஏதும் இல்லை. அவர்களின் நோக்கம் அமைதியைச் சீர்குலைப்பதுதான். அதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

இனிமேல் அடுத்த இலக்கை நோக்கி நாம் பயணப்பட வேண்டும். காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. அதனை பாகிஸ்தானிடம் இருந்து விடுவித்து இந்தியாவுடன் இணைக்க வேண்டும்.
இனி அடுத்தகட்டப் பணி அதுவாகத்தான் இருக்கும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகக் காண வேண்டும் என பிரார்த்தனை செய்வோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைநகர் முஸாபரபாத்துக்கு நாம் தடைகள் இல்லாமல் செல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை''.

இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x