Published : 19 Aug 2019 11:31 AM
Last Updated : 19 Aug 2019 11:31 AM

பிரதமர் மோடி தலைமையிலான அரசு அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யும்: கோவா முதல்வர் கணிப்பு

பானாஜி,

பிரதமர் மோடி தலைமையிலான அரசு அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்யும் என்று நம்புகிறேன் என்று கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பானாஜி நகரில் பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பேசியதாவது:

''வரும் நாட்களில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏராளமான முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது. அவை அனைத்தும் ஆலோசனை நிலையில், தயாராகவும் இருக்கின்றன. இந்த முடிவுகளை எடுத்த பின், பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு மாற்றாக எந்த அரசும் வர முடியாது.

மாநிலத்தில் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை திட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான் நாட்டை ஆட்சி செய்யும் என்று நாட்டு மக்கள் நம்புகிறார்கள். உண்மையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மக்களும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடி தான் நாட்டை ஆள வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆண்ட முந்தைய பாஜக அரசு ஏராளமான நலத்திட்டங்களைச் செய்துள்ளது. விரைவில் மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் வருவார் என்று நம்புகிறேன்.

மத்தியப் பிரதேச மக்கள் சிவராஜ் சிங் சவுகானையும், அவரின் அரசையும் இழந்துவிட்டனர். மாமாஜி, லாட்லி லட்சுமி ஆகிய திட்டங்கள் சிவராஜ் சவுகான் அறிமுகம் செய்த திட்டங்களில் முக்கியமானவை

மத்தியப் பிரதேச முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் வருவார் என்று உறுதியாகக் கூறுகிறேன். கடவுளிடம் பிரார்த்திப்பேன். மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் முதல்வரான பின் நான் மத்தியப் பிரதேசம் செல்வேன்''.

இவ்வாறு பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x