Published : 19 Aug 2019 11:01 AM
Last Updated : 19 Aug 2019 11:01 AM

காஷ்மீரில் பள்ளிகள் திறப்பு; வன்முறையை தடுக்க தீவிர பாதுகாப்பு 

ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்று 196 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஸ்ரீநகர் மட்டுமின்றி ரஜோரி உட்பட காஷ்மீ்ர் பள்ளத்தாக்கில் உள்ள பிற பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் இன்று முதல் முழுமையாக செயல்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் தூதரக உறவு ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இருநாடுகளிடையே நல்லுறவு சீர்கெட்டுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் காஷ்மீர் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து, அசம்பாவிதங்களை தவிர்ப் பதற்காக அங்கு 144 தடையும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டன.

அம்மாநில முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவினைவாதத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் இந்த நட வடிக்கை காரணமாக காஷ்மீரில் கடந்த இரண்டு வாரங்களாக அமைதி நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக் கிழமை முதலாக, காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவுகளை மத்திய அரசு திரும்பப் பெற்று வந்தது.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இதில், பல பகுதிகளில் வன்முறைகளும் வெடித்தன. ராணுவத் தினர், போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

அவர்களை பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் தொடர்ச்சியாக, ஸ்ரீநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் மீண்டும் தடை உத்தரவுகளை மத்திய அரசு நேற்று பிறப்பித்தது.

இந்தநிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி ஸ்ரீநகரில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அங்கு மொத்தமுள்ள 900 பள்ளிகளில் 196 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ரஜோரி உட்ப பிற பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீநகர் காவல் ஆணையர் சாஹித் இக்பால் கூறுகையில் ‘‘ஸ்ரீநகரில் நிலைமையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இன்று 196 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது எங்கள் பொறுப்பு. தேவையற்ற முறையில் வன்முறையை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோலவே அரசு அலுவலகங்கள் இன்று முதல் முழுமையாக செயல்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நேற்று இரவு இண்டர்நெட் வசதி வழங்கப்பட்ட சில இடங்களில் வதந்திகள் பரப்பப்படுவது தெரிய வந்ததால் அந்த பகுதிகளில் மட்டும் மீண்டும் தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நிலைமை சீரானதும் தகவல் தொடர்பு முற்றிலுமாக வழங்கப்படும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x