Published : 19 Aug 2019 09:45 AM
Last Updated : 19 Aug 2019 09:45 AM

ரூ.1.3 கோடி பரிசுத் தொகைக்கு வரி செலுத்த முடிவு: வரி விலக்கை நிராகரித்தார் பிரதமர் மோடி 

புதுடெல்லி

தென்கொரிய அரசு வழங்கிய ரூ.1.3 கோடி பரிசுத் தொகைக்கு வரி செலுத்தத் தயார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு வழங்கிய வரி விலக்கை வருமான வரித் துறை திரும்பப் பெற்றுள்ளது.

தென்கொரிய அரசு ஆண்டு தோறும் சியோல் அமைதிப் பரிசு வழங்கி வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான பரிசு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படும் என கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. “ஏழை- பணக்காரர் இடையிலான சமூக மற்றும் பொருளாதார வித்தியாசத்தைக் குறைத்தது மற்றும் உலக அமைதிக்காகப் பங்காற்றியது ஆகியவற்றுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது” என்று கொரியா தெரிவித்திருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் தென்கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற விழாவில் ரூ.1.3 கோடி ரொக்க மதிப்பு கொண்ட இந்த பரிசை பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார்.

இதனிடையே, வருமான வரிச் சட்டத்தின் 10 (17ஏ (i) பிரிவின் கீழ், பிரதமர் மோடி பரிசாக பெற்ற ரூ.1.3 கோடி தொகைக்கு வரி விலக்கு வழங்கப்படும் என நிதி அமைச்சகதத்தின் கீழ் இயங்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) கடந்த மார்ச் 6-ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி கடந்த 11-ம் தேதி ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், “எனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகைக்கு வரி விலக்கு வழங்குவதாக நிதி அமைச்சகம் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. மக்களவைத் தேர்தல் மற்றும் சில பணிகள் காரணமாக இதுகுறித்து உடனே கடிதம் எழுத முடியவில்லை. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு (வரி செலுத்தும்) பொருந்தும் வருமான வரி நடைமுறையை எனக்கும் அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் பெற்ற பரிசுத் தொகைக்கு உரிய வரியை செலுத்த தயாராக உள்ளேன். இந்த வரித் தொகை நாட்டை கட்டமைக்கும் பணிக்கு உதவும். எனவே, வரிவிலக்கு வழங்கி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி சிபிடிடி பிறப்பித்த உத்தரவில், “வருமான வரிச் சட்டம் வழங்கி உள்ள அதிகாரத்தின்படி, பிரதமர் மோடி பெற்ற சியோல் அமைதிப் பரிசுத் தொகைக்கு வரி விலக்கு வழங்கி பிறப்பித்த உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x