Published : 16 Aug 2019 04:57 PM
Last Updated : 16 Aug 2019 04:57 PM

அயோத்தி வழக்கு: சர்ச்சைக்குரிய இடத்தில் இந்து தெய்வங்களின் உருவங்கள்: உச்ச நீதிமன்றத்தில் ராம் லல்லா அமைப்பு தகவல்

புதுடெல்லி

அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடத்தில் இந்து தெய்வங்களின் உருவங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் ராம் லல்லா விராஜ்மான் அமைப்பு தெரிவித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் சமரச முயற்சி தோல்வி அடைந்ததால், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தினமும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நிர்மோகி அகாரா சார்பில் முதல் 2 நாட்கள் வாதங்கள் வைக்கப்பட்டன. ராம் லல்லா விராஜ்மான் அமைப்பு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

ராம் லல்லா விராஜ்மான் சார்பாக வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜரானார். அவர் தனது வாதத்தில் ‘‘அயோத்தி கடவுள் ராமரின் ஜென்மபூமி, பிறந்த இடம் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இது பகுத்தறிவுகுட்பட்டதா என நீதிமன்றம் ஆய்வு செய்யக்கூடாது’’ எனக் கூறினார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராம் லல்லா சார்பில் ஆஜரான வைத்தியநாதன் தனது வாதங்களை தொடர்ந்தார். அவர் கூறுகையில் ‘‘அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் 1950-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையர் ஆய்வு செய்துள்ளார்.

அப்போதைய ஆணையரின் அறிக்கையில் அப்போது மசூதியாக இருந்த கட்டத்தின் தூண்களில் இந்து தெய்வங்களின் உருவங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளார். சிவன் உள்ளிட்ட இந்த உருவங்கள் வழக்கமாக மசூதிகளில் இருக்க வாய்ப்பில்லை. இந்து கோயில்களில் மட்டுமே இருக்கும்’’ எனக் கூறினார்.

மேலும் அயோத்தி கோயில் தூண்களில் இருந்த உருவங்களின் படங்களையும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். அத்துடன் 1950-ம் ஆண்டு அளிக்கப்பட்ட அறிக்கையையும், அப்போது மசூதிக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் நீதிமன்றத்தில் வைத்தியநாதன் சமர்பித்தார். அந்த புகைப்படங்களில் இந்து தெய்வங்களின் உருவங்கள் இருப்பதாகவும், இது இந்து மத சம்பிரதாயத்தைச் சேர்ந்தது எனவும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x