Published : 14 Aug 2019 06:17 PM
Last Updated : 14 Aug 2019 06:17 PM
புதுடெல்லி
திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சோவன் சட்டர்ஜி இன்று பாஜகவில் இணைந்தார்.
மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக 18 இடங்களில் வென்றதைத் தொடர்ந்து பாஜக பக்கம் எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் வேறு கட்சியில் இருந்து விலகி சேர்வது அதிகரித்து வருகிறது. கடந்த முறை வென்ற 34 இடங்களில் 8 இடங்கள் குறைந்து 2019 மக்களவைத் தேர்தலில் 22 இடங்களில் மட்டுமே மம்தா கட்சி வென்றது. இதனால், முதல்வர் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குடன் இருந்த முகுல் ராய், கடந்த 2017-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவரின் மகன் சுப்ராங்ஸ் ராய் மட்டும் திரிணமூல் கட்சியில் இருந்தார்.
எம்எல்ஏவாக இருந்த சுப்ராங்ஸ் ராய் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி அவரை சஸ்பெண்டு செய்திருந்தனர். பாஜகவில் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா, முகுல் ராய் முன்னிலையில் சுப்ராங்ஸ் ராய், துஷார்காந்தி பட்டாச்சார்யா, சிபிஎம் எம்எல்ஏ தேபேந்திரநாத் ராய் ஆகியோர் பாஜகவில் இணைந்தார்.
தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், வார்டு கவுன்சிலர்கள் என பலரும் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர். இந்தநிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சோவன் சட்டர்ஜி இன்று பாஜகவில் இணைந்தார்.
டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் செயல் தலைவர் ஜெ.பி. நட்டா முன்னிலையில் சோவன் சட்டர்ஜி பாஜகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் முகுல் ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சோவன் சட்டர்ஜி கொல்கத்தா நகர முன்னாள் மேயர் ஆவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT