Published : 14 Aug 2019 02:37 PM
Last Updated : 14 Aug 2019 02:37 PM

அயோத்தி ராமர் பிறந்த இடம் என்பது நம்பிக்கை; ஆய்வு செய்யக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் வாதம்

புதுடெல்லி

அயோத்தி ராமர் பிறந்த இடம் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனை நீதிமன்றம் பகுத்தறிவுக்குட்பட்டு ஆய்வு செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் ராம் லல்லா சார்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் சமரச முயற்சி தோல்வி அடைந்ததால், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தினமும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நிர்மோகி அகாரா சார்பில் முதல் 2 நாட்கள் வாதங்கள் வைக்கப்பட்டன. நேற்று முதல் ராம் லல்லா விராஜ்மான் அமைப்பு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ராம் லல்லா சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ராம் லல்லா சார்பில் நேற்று ஆஜரான வைத்தியநாதன் ‘‘சர்ச்சைக்குரிய இடம் முழுவதுமே ராம ஜென்மபூமி தான். அதில் எந்த பகுதி ராம் லல்லாவுக்கு சொந்தம் என கணக்கிட கூடாது. இது முழுக்க முழுக்க ராம் லல்லாவுக்கு மட்டுமே சொந்தம். முஸ்லிம்கள் இதில் உரிமை கொண்டாட முடியாது’’ என தெரிவித்தார்.

இன்றும் ராம் லல்லா விராஜ்மான் சார்பாக வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜரானார். அவர் தனது வாதத்தில் ‘‘அயோத்தி கடவுள் ராமரின் ஜென்மபூமி, பிறந்த இடம் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இது பகுத்தறிவுகுட்பட்டதா என நீதிமன்றம் ஆய்வு செய்யக்கூடாது’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x