Published : 14 Aug 2019 10:27 AM
Last Updated : 14 Aug 2019 10:27 AM

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது சந்திரயான் 2 

நிலவின் தென் பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

சந்திரயான் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் ‘சந்திரயான்-2’ திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக அதிநவீன வசதிகளுடன் ரூ.604 கோடியில் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் 22-ம் தேதி மதியம் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திரயான் 2 இதுவரை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவந்தது. இந்நிலையில் அது இன்று அதிகாலை அதன் பாதையிலிருந்து உயர்த்தப்பட்டு நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நிறுத்தப்பட்டது.

அதாவது ட்ரான்ஸ் லூனார் இன்ஜெக்‌ஷன் (Trans Lunar Injection) எனப்படும் சந்திரயான் -2 விண்கலத்தின் இறுதி சுற்றுப்பாதை உயர்த்தும் பணி இன்று (ஆகஸ்ட் 14, 2019) காலை 2:21 மணிக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து இதனை கண்காணித்தனர்.

சரியான முறையில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் வரும் செப்டம்பர் 8-ம் தேதி திட்டமிட்டபடி சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x