

காங்டாக்
பவன்குமார் சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.
சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக முதல்வராக பதவி வகித்தவர் பவன் குமார் சாம்லிங். இவரது தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎஃப்) கட்சி, 1994 தேர்தலில் 19 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.
தொடர்ந்து தேர்தல்களில் வென்று 25 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வந்தார் சாம்லிங். இந்தநிலையில் கடந்த கடந்த நாடாளுமன்ற தேர்தலுடன் இந்த மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது.
32 தொகுகிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா 17 தொகுதிகளிலும், முன்பு ஆளும் கட்சியாக இருந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களிலும் வென்றன.
சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா தலைவர்
பிரேம் சிங் தமங் (பிஎஸ் கோலே) முதல்வராக பொறுப்பேற்றார். தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இந்தநிலையில், பவன்குமார் சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்தனர். டெல்லியில் பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் பொதுச் செயலாளர் ராம் மாதவ் ஆகியோர் முன்னிலையில் அவர்கள் தங்களை பாஜக-வில் இணைத்துக்கொண்டனர். இதன் மூலம் முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங்கின் சிக்கிம் ஜனநாயக முன்னணி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.