

விசாகப்பட்டினம்
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சிவில் பணிகளுக்காக ஒரு படகில் 29 பேர் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த படகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயந்து போன ஊழியர்கள் அனைவரும் உடனடியாக படகிலிருந்து கடலில் குதித்தனர்.
இவர்களது அலறல் சத்தத்தை கேட்ட அதிகாரிகள், மீட்பு பணிக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஊழியர்களை காப்பாற்ற சிறு படகுகள் அனுப்பப்பட்டன. இதன் மூலம் 28 பேர் காப்பாற்றப்பட்டனர். கடலில் குதித்தவர்களில் ஒருவரை மட்டும் காணவில்லை.
அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. காப்பாற்றப்பட்டவர்கள் அனைவரும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.