Published : 09 Jul 2015 10:03 AM
Last Updated : 09 Jul 2015 10:03 AM
கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி பாஸ்கர் ராவின் மகன் அஸ்வின் ராவுக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி குமார் விசாரிக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் சங்கம் புகார் செய்துள்ளது.
கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி பாஸ்கர் ராவின் மகன் அஸ்வின் ராவ், சோதனை நடத்தாமல் இருப்பதற்காக பல்வேறு முக்கிய பிரமுகர்களிடம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அஸ்வின் ராவ் மற்றும் 3 லோக் ஆயுக்தா முக்கிய அதிகாரிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே, அஸ்வின் ராவ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “என் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வதுடன் என் மீதான புகாரை சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரணை அதிகாரி சோனியா நரங் விசாரிக்க தடை விதிக்க வேண் டும்” என கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி குமார் விசாரித்து வருகிறார். இதுகுறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் சுப்பா ரெட்டி நேற்று கூறியதாவது:
லோக் ஆயுக்தா முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள நீதிபதி பாஸ் கர் ராவின் மகன் அஸ்வின் ராவுக்கு எதிரான மனுவை நீதிபதி குமார் விசாரித்து வருகிறார். இதற்கு நீதித் துறை வட்டாரத்தில் கடும் ஆட்சேபம் எழுந்துள்ளது.
ஏனென்றால், ராவ் தலைமை நீதிபதியாக இருந்தபோதுதான் குமார் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனால் பல நேரங்களில் பாஸ்கர் ராவ் தனது மானசீக குரு என குமார் வெளிப்படையாகவே தெரிவித்துள் ளார். இதுமட்டுமல்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன்புகூட, பாஸ்கர் ராவ் எழுதிய நூலை குமார் வெளியிட்டார்.
குமாருக்கும், பாஸ்கர் ராவுக்கும் நெருங்கிய உறவு இருப்பதை நீதித் துறை வட்டாரத்தில் அனைவரும் அறிவார்கள். இந்நிலையில் பாஸ்கர் ராவின் மகன் அஸ்வின் ராவுக்கு எதிரான வழக்கை நீதிபதி குமார் விசாரிப்பது ஏற்புடையது அல்ல. எனவே விசாரணை அமர்வில் இருந்து நீதிபதி குமாரை நீக்க வேண்டும்.
இதுதொடர்பாக ஒரு புகார் மனுவை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி உள்ளேன். இதனால் நேர்மையான நீதிபதியாக அறியப்படும் குமார், தனது பொறுப்பில் இருந்து விலகுவார் என எதிர்ப்பார்க்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT