Published : 12 Aug 2019 03:50 PM
Last Updated : 12 Aug 2019 03:50 PM

பாகிஸ்தானுக்கு பதிலடி: டெல்லி-லாகூர் இடையிலான பஸ் சேவையை ரத்து செய்தது இந்தியா

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததைத்த தொடர்ந்து ஆத்திரமடைந்த பாகிஸ்தான் அரசு, லாகூர்- டெல்லி வரை நட்பு ரீதியிலான பஸ் போக்குவரத்தை ரத்து செய்தது, அதற்கு பதிலடியாக இந்தியாவும் இன்று தற்காலிகமாக ரத்து செய்தது.

டெல்லியில் இருந்து இன்று காலை 6 மணிக்கு பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு டெல்லி போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்து இயக்கப்பட இருந்தது. ஆனால், பாகிஸ்தான் அரசின் செயல்பட்டால் இன்று முதல் லாகூர் நகருக்கு பஸ்கள் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு அடிப்படையிலான பஸ் போக்குவரத்து கடந்த 1999-ம் ஆண்டு மத்தியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், 2001-ம் ஆண்டு் நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டு, 2003-ம் ஆண்டு ஜூலையில் மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து, ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியுள்ளது. மேலும் சர்வதேச சமூகத்தின் உதவியையும் அந்நாடு கோரியுள்ளது.

இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் முதலில் லாகூர்- டெல்லி சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலை பாகிஸ்தான் பகுதிக்குள் அனுமதிக்க மறுத்து நிறுத்தியது. அதன்பின் ஜோத்பூர்-கராச்சி இடையேயான தார் எக்ஸ்பிரஸ் ரயிலையும் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியது.

இந்நிலையில் லாகூர் -டெல்லி இடையே சென்று வந்த நட்புறவு அடிப்படையிலான பஸ் போக்குவரத்தையும் 10-ம் தேதி நள்ளிரவு முதல் பாகிஸ்தான் தற்காலிகமாக ரத்து செய்தது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் சுற்றுலாக் கழகத்தின் சார்பில் அதிகாரிகள் டெல்லி போக்குவரத்து கழகத்துக்கு கடந்த சனிக்கிழமை தொலைபேசி வாயிலாக வரும் திங்கள்கிழமை முதல் டெல்லி தங்கள் பேருந்துகள் இயக்கப்படாது என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்தியாவும் டெல்லி-லாகூர் போக்குவரத்து சேவையை இன்று முதல் ரத்து செய்தது.

கடைசியாக கடந்த சனிக்கிழமை காலை 2 பயணிகளுடன் லாகூருக்கு டெல்லி சுற்றுலாக் கழக பேருந்து புறப்பட்டது. பின்னர் அங்கிருந்து 19 பயணிகளுடன் டெல்லி திரும்பியது

இந்நிலையில் இன்று காலை டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் இருக்கும் பஸ் நிலையத்தில் இருந்து பேருந்து லாகூருக்கு புறப்படும் என்று பயணிகள் எதிர்பார்திருந்த நிலையில் லாகூருக்கு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எப்போது மீண்டும் சேவை தொடங்கும் எனும் விவரத்தை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x