Published : 09 Aug 2019 07:01 PM
Last Updated : 09 Aug 2019 07:01 PM

காங்கிரஸ் கொறடா பாஜகவில் இணைந்தார்: டிஆர்எஸ் நிர்வாகியும் சேர்ந்தார்

புதுடெல்லி

காஷ்மீர் விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலங்களவை காங்கிரஸ் கொறடா பதவியில் இருந்து விலகிய மூத்த தலைவர் புவனேஸ்வர் காலிட்டா இன்று பாஜகவில் இணைந்தார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரான புவனேஸ்வர் காலிட்டா கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அதன் பிறகு மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். மாநிலங்களவை காங்கிரஸ் கொறடாவாகவும் பதவி வகித்து வந்தார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு திருத்த தீர்மானம், காஷ்மீ்ர் மறுசீரமைப்பு மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

மாநிலங்களவையில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத் உட்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வாக்களித்தது. ஆனால் மாநிலங்களவை காங்கிரஸ் கொறடா புவனேஸ்வர் காலிட்டா கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக பேசினார். கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பதவி விலகினார்.

எம்.பி. பதவியில் இருந்தும், காங்கிரஸில் இருந்தும் விலகிய காலிட்டா இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் பாஜக அலுவலகத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.

இதனிடையே தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான விவேகானந்த்தும் இன்று பாஜகவில் இணைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x