Published : 09 Aug 2019 04:39 PM
Last Updated : 09 Aug 2019 04:39 PM
புதுடெல்லி
சர்ச்சைக்குரிய மொயின் குரேஷி தொடர்புடைய பண மோசடி வழக்கில் கைதாகியுள்ள தொழிலதிபர் சானா சதீஷ் பாபு வரும் ஆகஸ்ட் 23 வரை விசாரணைக்காக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா, இணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் ஒருவொருக்கு ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு கூறிய மோதல் போக்கு கடந்த ஆண்டு உச்சக்கட்டத்தை எட்டியது. இதனால், இரு உயரதிகாரிகளையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்தது.
நிதி மோசடி தொடர்பாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீது சிபிஐ பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தது. இந்த வழக்குகளை நீர்த்துப் போகச் செய்ய சிபிஐ அதிகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு ரூ.3 கோடியை மொயின் குரேஷி வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த ஜூலை 26 அன்று சானா சதீஷ் பாபு அமலாக்கத் துறையினரால் டெல்லியில் கைது செய்யப்பட்டார். இவர், பண மோசடியில் ஈடுபட்ட மொயின் குரேஷி உள்ளிட்ட சிலருடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்.
அமலாக்கத் துறையின் காவலில் இருந்த பாபு இன்றுகாலை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அமலாக்கத்துறை கூடுதலாக அவகாசம் ஏதும் கேட்காததால் அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நீதிமன்றம் இவ்வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 17 அன்று ஒத்திவைத்தது.
இவ்வழக்கின் விசாரணையில், சனா சதீஷ்பாபு மொயீன் குரேஷிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT