Published : 07 Aug 2019 03:09 PM
Last Updated : 07 Aug 2019 03:09 PM

பசு பராமரிப்பில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: உ.பி. முதல்வரின் புதிய திட்டம் 

லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில் சாலைகளில் அலையும் பசுக்கள் நலத்திட்டத்துக்கும், இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கும் சேர்த்து முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். மாநிலத்தின் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவும், சாலையில் அலையும் பசுக்கள் நலனுக்காகவும், 'முக்கிய மந்திரி பி சஹாரா கவு வன்ஷ் சபாகிதா யோஜனா' எனும் திட்டத்தை ஆதித்யநாத் கொண்டுவந்துள்ளார்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், " 2012-ம் ஆண்டு புள்ளிவிவரங்கள்படி மாநிலத்தில் 2.56 கோடி கால்நடைகள் இருக்கின்றன. இதில் 10 முதல் 12 லட்சம் கால்நடைகள் உரிமையாளர்களின் பராமரிப்பின்றி சாலைகளிலும், தெருக்களிலும் அலைகின்றன.

இந்தக் கால்நடைகளைப் பராமரிப்பதற்காக அரசு சார்பில் 523 கோசாலைகள் செயல்படுகின்றன. இருப்பினும் சாலைகளில் அலையும் பசுக்களைக் கவனிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், பசுக்களைப் பராமரிக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாகவும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ‘முக்கிய மந்திரி பி சஹாரா கவு வன்ஷ் சபாகிதா யோஜனா’ என்று பெயர். இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ஒரு லட்சம் பசுக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

அதாவது பசுக்களைப் பராமரிக்க விரும்புவோர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கேட்கும் பசுக்கள் தரப்படும். பசுக்கள் ஒவ்வொன்றின் பராமரிப்புச் செலவுக்கு தினம் தலா 30 ரூபாய் வீதம், மாதந்தோறும் ஒரு பசுவின் பராமரிப்புக்கு 900 ரூபாயும் வழங்கப்படும்.

இதுபோல் ஒருவர் எத்தனை பசுக்களை வேண்டுமானாலும் சொந்தப் பராமரிப்பில் வளர்க்கலாம். விவசாயிகள், விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம். ஒவ்வொரு பசுவின் பராமரிப்புத் தொகையும் வளர்ப்பவரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக ஒரு லட்சம் பசுக்கள் விருப்பப்படுவோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக ரூ.109 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2019-20ம் ஆண்டு பட்ஜெட்டில் மாநிலத்தில் கால்நடை வளர்ச்சி, பராமரிப்புக்காக மாநில அரசு ரூ.600 கோடி ஒதுக்கியது. ஆனால், குழந்தைகளின் ஆரம்பக் கல்வி, உயர்கல்வித் திட்டங்களுக்குச் சேர்த்தே ரூ.500 கோடிதான் ஒதுக்கப்பட்டது.

காலநடைகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.600 கோடியில் ரூ.250 கோடி பசுக்களுக்கான கோசாலைகளை கிராமப்புறங்களில் அமைக்கவும், ரூ.200 கோடி நகர்ப்புறங்களில் கோசாலைகள் அமைக்கவும் ஒதுக்கப்பட்டது. மது வகைகளுக்கு கூடுதல் வரி விதித்ததன் மூலம் கிடைக்கும் ரூ.165 கோடி, கால்நடைகளுக்குத் தீவனம் வாங்கப் பயன்படுத்தப்படுகிறது.

இருந்தபோதிலும் பசுக்களையும், கால்நடைகளையும் பராமரிக்க முடியாமல் ஏராளமான மாடுகள் சாலையில் திரிவதாலும், பராமரிப்பின்றி இறக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதால், இந்தத் திட்டத்தை மாநில அரசு கொண்டுவந்துள்ளது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x