Published : 06 Aug 2019 07:31 AM
Last Updated : 06 Aug 2019 07:31 AM
புதுடெல்லி
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை ரத்து செய்யும் அரசாணைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் வழங்கினார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ சட்டப் பிரிவுகளை ரத்து செய்யும் தீர்மானம் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேறியது.
தீவிரவாத அச்சுறுத்தல் காரண மாக காஷ்மீரில் கடந்த 2-ம் தேதி அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப் பட்டது. அமர்நாத் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு மாநில அரசு உத்தரவிட்டது. அதன் படி அந்த மாநிலத்தில் தங்கி யிருந்த வெளிமாநில மக்கள் வெளி யேறினர். காஷ்மீரில் பாதுகாப்பை அதிகரிக்க கூடுதலாக 38,000 வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
மசோதாக்கள் தாக்கல்
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு மாநிலங்களவைக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35 ஏ சட்டப்பிரிவுகளை ரத்து செய்யும் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
மேலும் காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவையும் தாக்கல் செய்தார். அதன்படி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீரும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என்று அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
மேலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை ரத்து செய்யும் அரசாணைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியதையும் அவையில் அமித் ஷா தெரிவித்தார். இதனிடையே குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில், அதிகாரபூர்வமாக அர சாணையும் வெளியிடப்பட்டது.
18-ம் நூற்றாண்டில் காஷ்மீர்
மாநிலங்களவையில் அமித் ஷா பேசியதாவது:
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு தான் தீவிரவாதத்துக்கு மூலக் காரணமாக உள்ளது. யாரும் நிலம் வாங்க முடியாது என்பதால் எந்த வொரு நிறுவனமும் காஷ்மீரில் ஆலை அமைப்பது இல்லை. தனி யார் மருத்துவமனைகள் இல்லாத தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளனர். நாம் 21-ம் நூற் றாண்டில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். ஆனால் காஷ்மீர் 18-ம் நூற்றாண்டில் இருக்கிறது. சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை முன்னரே நீக்கியிருந்தால் 41,000 பேர் உயிர்பலியாகி இருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
கூச்சல், குழப்பம்
மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
அதேநேரம் சிவசேனா, பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளின் எம்.பி.க்கள் மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசியதாவது:
இந்தியாவின் கிரீடமாக காஷ்மீர் உள்ளது. அந்த மாநிலத்தின் தலை வெட்டப்பட்டுள்ளது. இந்திய வரை படத்தில் இருந்து காஷ்மீர் நீக்கப் பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதேபோல குஜ ராத்தை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு மாற்றுமா?
இவ்வாறு அவர் பேசினார்.
மதிமுக எம்.பி. வைகோ பேசும் போது, காஷ்மீரில் மத்திய அரசு ஜனநாயகத்தை படுகொலை செய் துள்ளது. நேரு கொடுத்த வாக்குறுதி மீறப்பட்டிருக்கிறது. அந்த மாநில மக்களை ஏமாற்றியுள்ளோம். காஷ் மீரின் இன்றைய நிலையை பார்க்கும் போது எமர்ஜென்ஸி நினைவுக்கு வருகிறது" என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு "எமர்ஜென்ஸி எதுவும் இல்லை. அர்ஜென்ஸி (அவசர தேவை) மட்டும்தான்" என்று குறிப்பிட்டார். "இதை வைகோ புரிந்து கொள்ள வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
திமுக எம்.பி. திருச்சி சிவா பேசும்போது, "காஷ்மீர் விவகாரங் கள் குறித்து அந்த மாநில சட்டப் பேரவையில்தான் முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசு முடி வெடுப்பது சட்டவிரோதம்" என்று குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோஷத்தால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.
நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் பேசும்போது, "சிறப்பு அந் தஸ்து பிரிவால் பெண்கள், நலிந்த பிரிவினர் கடுமையாகப் பாதிக் கப்பட்டனர். அவர்கள் உட்பட பல் வேறு தரப்பினர் அரசின் முடிவை வரவேற்றுள்ளனர்" என்று தெரி வித்தார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. விஜய் சாய் ரெட்டி கூறும்போது, "மத்திய உள்துறை அமைச்சர் துணிச் சலான நடவடிக்கையை எடுத்துள் ளார். மசோதாவை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரிக்கிறது" என்று தெரிவித்தார்.
அதிமுக ஆதரவு
அதிமுக எம்.பி. நவநீதகிருஷ் ணன் பேசும்போது, "காஷ்மீருக் கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் தீர்மானம், மசோதாவுக்கு அதிமுக ஆதரவளிக்கிறது" என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளான தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரி வால் உள்ளிட்டோர் ட்விட்டர் வாயி லாக மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பிடிபி எம்.பிக்கள் வெளியேற்றம்
காஷ்மீரை சேர்ந்த மக்கள் ஜன நாயக கட்சி (பிடிபி) எம்.பி.க்கள் மிர் பயஸ், நசீர் அகமது ஆகியோர் நேற்று மாநிலங்களவையில் அர சமைப்பு சாசனத்தை கிழித்தனர். மிர் பயஸ் எம்.பி. தனது சட்டையை தானே கிழித்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து இருவரையும் வெளியேற்ற அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரையும் அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.
இறுதியில் வாக்கெடுப்பு நடத் தப்பட்டது. முதலில் காஷ்மீரில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதன்பின்னர் காஷ்மீரை, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 125 எம்.பி.க்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. 61 எம்.பி.க்கள் எதிர்த்து வாக் களித்தனர். ஒரு எம்.பி. வாக் கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதைத் தொடர்ந்து காஷ் மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம் குரல் வாக் கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.
நாளை பிரதமர் உரை
காஷ்மீர் தொடர்பாக மாநிலங் களவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மசோதா மக்களவையில் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
மேலும் காஷ்மீர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது: உள்துறை அமைச்சர் அமித் ஷா
மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:
அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது சட்டப் பிரிவில் திருத்தம் செய்தோ ரத்து செய்தோ குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிக்கலாம். ஆனால், இதற்கு மாநில சட்டப்பேரவையின் பரிந்துரை அவசியம் என இந்தப் பிரிவின் உட்பிரிவு 3-ல் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், சட்டப்பேரவை செயல்பாட்டில் இல்லாவிட்டால் அந்த மாநில அரசின் அதிகாரம் தானாக நாடாளுமன்றத்தின் வசமாகிவிடும்.
காஷ்மீர் சட்டப்பேரவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கலைக்கப்பட்டது. இதன்மூலம், 370-வது பிரிவில் மாற்றம் செய்யவோ அதை ரத்து செய்யவோ சட்டப்பேரவையின் பரிந்துரை அவசியம் என்ற பிரிவு அடிபட்டுவிடுகிறது.
காஷ்மீர் சட்டப்பேரவை செயல்பாட்டில் இல்லாத நிலையில், 370 வது பிரிவை திருத்தவோ ரத்து செய்யவோ நாடாளுமன்றத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. இது முதல் முறை அல்ல. 1952 மற்றும் 1962-லும் அப்போதைய காங்கிரஸ் அரசு இதே நடைமுறையைப் பயன்படுத்தி 370-வது பிரிவை திருத்தி உள்ளது. எனவே, உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். காஷ்மீரில் அமைதி திரும்பியவுடன் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். யூனியன் பிரதேசமாக காஷ்மீர் நீடிக்க மத்திய அரசு விரும்பவில்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புகைப்படம் தந்த தகவல்
நாடாளுமன்றத்துக்குள் அமித் ஷா நேற்று நுழைந்தபோது, அவரை ஏஎப்பி புகைப்படக் கலைஞர் படம் எடுத்துள்ளார். அதில் 370-வது பிரிவை ரத்து செய்வது மற்றும் காஷ்மீர் மாநிலத்தை 2-ஆக பிரிப்பது தொடர்பான அரசின் நிகழ்ச்சி நிரலை அவர் தனது கையில் வைத்திருந்தது பதிவாகி உள்ளது.
குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவரிடம் தகவல் தெரிவிப்பது, அமைச்சரவை கூட்டம், குடியரசுத் தலைவரின் அறிவிக்கை, மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றுவது, மாநிலங்களவையில் பாதுகாப்பு என அதில் நிகழ்ச்சிநிரல் வரிசைக்கிரமமாக பட்டியலிடப்பட்டிருந்தது.
அதன்படியே நேற்று காலை மாநிலங்களவை கூடியதும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்வது தொடர்பான தீர்மானத்தை அமித் ஷா தாக்கல் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT