

முன்னாள் காஷ்மீர் முதல்வர்களான ஓமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் காஷ்மீரில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு இரவு முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு தலைவர்கள் சாஜத் லோன், இம்ரான் அன்சாரி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் சில கைதுகளும் நடைபெற்றுள்ளது என்று கூறிய அதிகாரிகள் இது குறித்த விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ம் சட்டப்பிரிவு இன்று ரத்து செய்யப்பட்டதன் முக்கியமான முடிவுகளை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர்களான ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோர் மத்திய அரசின் முடிவான 370ம் சட்டப்பிரிவு நீக்கத்தை கடுமையாக விமர்சித்தனர்.
மெஹ்பூபா முப்தி இன்றைய தினத்தை ‘இந்திய ஜனநாயகத்தின் இருண்ட நாள்’ என்று வர்ணித்தார்.
இந்நிலையில் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-பிடிஐ