Published : 05 Aug 2019 12:58 PM
Last Updated : 05 Aug 2019 12:58 PM

உன்னாவ் இளம்பெண்ணை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு: யாரும் ஆஜராகாததால் உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

குல்தீப் செங்காரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான உன்னாவைச் சேர்ந்த இளம்பெண்ணை சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, இன்று (திங்கள்கிழமை) காலை இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. உன்னாவ் இளம்பெண் சார்பில் நீதிமன்றத்தில் யாரும் ஆஜராகவில்லை.

இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் வி.கிரி நடுநிலை அறிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் இன்று அவர் பேசும்போது, உன்னாவ் இளம்பெண் மற்றும் அவரது வழக்கறிஞரை டெல்லி எய்ம்ஸுக்கு மாற்றுவது தொடர்பாக எனக்கு எந்த ஒரு உத்தரவும் வரவில்லை எனத் தெரிவித்தார். இதனையடுத்து, நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

கடந்த 28-ம் தேதி உன்னாவ் இளம்பெண், அவரது வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அப்பெண் படுகாயமடைந்தார். உறவினர்கள் இருவர் பலியாகினர். வழக்கறிஞரும், உன்னாவ் இளம்பெண்ணும் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அப்பெண்ணுக்கு நிமோனியா தொற்றும் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார்.

முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சீதாபூர் சிறையிலிருந்து சிபிஐ அதிகாரிகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குல்தீப் செங்கார், என் மீது அரசியல் காழ்ப்புணர்வுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அந்தப் பெண் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்றே பிரார்த்தனை செய்கிறேன்" எனக் கூறியிருந்தார்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x