Published : 05 Aug 2019 01:00 PM
Last Updated : 05 Aug 2019 01:00 PM
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமைச் சட்டப் பிரிவு 370, ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்ததை 70 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாகப் பார்க்கிறோம் என்று பாஜக தலைவர் ராம் மாதவ் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமைச் சட்டம் 35ஏ, 370 ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்படும் என்று நாடாளுமன்றத்தில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியானது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பாஜக தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் ட்விட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் கூறுகையில், "என்ன ஒரு அற்புதமான நாள். டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியுன் சேர்நது ஆயிரக்கணக்கான தியாகிகள் இந்தியாவுடன் காஷ்மீரை முழுமையாக ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
70 ஆண்டுகளாக தேசத்தின் கோரிக்கை இப்போது நம் கண்முன், நம் காலத்திலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது. எப்போதாவது கற்பனைசெய்தோமா?" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன் பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் வாழ்த்துகளைக் கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறுகையில், " ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு உரிமைச் சட்டத்தை ரத்து செய்து வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்த பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வளர்ச்சி, மேம்பாட்டுக்கான பாதை திறக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT