Published : 03 Jul 2015 09:51 AM
Last Updated : 03 Jul 2015 09:51 AM
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் சிறுமி ஒருவரை தவறுதலாக உள்ளே வைத்துப் பூட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணமான ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கேந்திரபாரா பகுதியில் கரினாசி கிராம பஞ்சாயத்தில் ஹரியபங்கா தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை இந்தப் பள்ளியின் வகுப்பறை ஒன்றில் 6 வயது சிறுமி ஒருவரை தவறுதலாக உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு ஆசிரியர்கள் சென்றுவிட்டனர்.
தங்களது மகள் பள்ளி முடிந்து வீடு திரும்பாததையடுத்து அந்தச் சிறுமியின் பெற்றோர் பதற்றமடைந்தனர். பள்ளிக்கு அருகில் உள்ள மைதானத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, வகுப்பறை ஒன்றில் இருந்து அழுகை சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து அந்தச் சிறுவர்கள் ஊர் மக்களிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து வகுப்பறையின் கதவுகளை உடைத்து அந்தச் சிறுமியை மீட்டனர். சுமார் மூன்று மணி நேரம் அந்தச் சிறுமி வகுப்பறைக்குள் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் திங்கள்கிழமை ஆசிரியர்களை பள்ளிக்குள் நுழையவிடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைக் கேள்விப்பட்ட கேந்திரபாரா மாவட்ட கல்வி அலுவலர் சங்கரம் குமார் சாஹு, "ஆசிரியர்களின் பொறுப்பற்ற செயலால் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்குக் காரணமான ஆசிரியர் ஒருவர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பள்ளி மூடுவதற்கு முன்பே வீட்டுக்குச் சென்ற இதர மூன்று ஆசிரியர்களின் சம்பளம் ஒழுங்கு நடவடிக்கையாகப் பிடித்தம் செய்யப்பட உள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT