Published : 04 Aug 2019 12:40 PM
Last Updated : 04 Aug 2019 12:40 PM
புதுடெல்லி,
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தானிய ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்திய நிலையில் அவர்களின் உடல்கள் இந்திய எல்லைக்குள் உள்ளன.
கொல்லப்பட்ட அவர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் வந்து எடுத்துச்செல்லுங்கள் என பாகிஸ்தான் ராணுவத்தை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.
காஷ்மீர் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளார்கள் என்ற ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, கடந்த வாரத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களை மத்திய அரசு குவித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களையும் உடனடியாக திரும்புமாறும் மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த சூழலில் இந்தியாவின் கிரண் செக்டார் எல்லைப்பகுதிக்குள் பாகிஸ்தான் பார்டர் ஆக்ஷன் டீம் (பிஏடி) ஊடுருவ முயன்றனர். அவர்களின் முயற்சியை தடுத்த இந்திய ராணுவத்தினர், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பாகிஸ்தான் ராணுவத்தினர், தீவிரவாதிகள் என 7 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் இந்திய எல்லைக்குள் இருக்கின்றன.
இந்நிலையில் கொல்லப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய உடல்களை எடுத்துச்செல்லுமாறு இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது. உடல்களை எடுக்க வரும்போது, பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளைக் கொடியுடன் வந்து உடல்களை எடுக்கலாம் என்று ராணுவத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணுவம் தரப்பில் கூறுகையில், "பாகிஸ்தான் ராணுவத்தின் துணையுடன் எல்லைக்குள் ஊடுருவ முயன்றது தீவிரவாதிகள்தான் என்பது தெளிவாகத் தெரிந்தது. இந்த தாக்குதலுக்குப் பின் பாதுகாப்பு தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு வைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய வேட்டையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஸ்னைப்பர் ரைபிள், சக்திவாய்ந்த வெடிபொருட்கள், பாகிஸ்தான் முத்திரை பதித்த கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இருப்பினும் நேற்று இரவு முதல் தொடர்ந்து எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்தியா சார்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT